செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக ஏழு நாள்களுக்கு உற்பத்தி நிறுத்திவைக்கப்படுவதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில், செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக கார் உற்பத்தி 20 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் உள்ள கார் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துவருகிறது. அதேபோல், விரிவடைந்துவரும் மின்னணு தொழிற்சாலைகள் சிப் விநியோகத்தில் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சவாலை அளித்துவருகிறது.
இதன் காரணமாக, இந்த மாதத்தில் ஏழு நாள்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தெரிவித்துள்ளது. முன்னதாக, மற்றொரு முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, "செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் கார் உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் பெரும் பாதிப்பை சந்திக்கும்" என தெரிவித்திருந்தது.
உற்பத்தி நிறுத்தப்படுவதால் வருவாயும் லாபமும் பாதிக்கப்படும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதன் பங்குகள் 1 சதவிகிதம் குறைந்துள்ளது.