பரோடா வங்கி கடனளிப்பில் 12% வளா்ச்சி
புது தில்லி: கடந்த மாா்ச் காலாண்டில் 12.41 சதவீத கடனளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் 2-ஆவது பெரிய பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.10.89 லட்சம் கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
முந்தைய 2022-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.9.69 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு சுமாா் 12.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்புத் தொகை இருப்பு 10.24 சதவீதம் அதிகரித்து ரூ.13.26 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.