கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!
சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக, கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.61.95 லட்சம் அபராதம் விதிப்பு.
மும்பை: அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக, கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.61.95 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் 11, 2025 தேதியிட்ட உத்தரவில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிகளின் அடிப்படையில், 'வங்கிச் சேவைகளுக்கான அணுகல் - அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு' மற்றும் 'வணிக முகவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் நோக்கம்' குறித்து ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததும் மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் விதிகள், 2006ஆம் ஆண்டின் விதிகளை மீறியது ஆகியவற்றுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2024 மார்ச் மாதம் முடிய நிலவரப்படி, வங்கியின் நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு, ரிசர்வ் வங்கியால், கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பீட்டிற்கான மேற்பார்வை ஆய்வு நடத்தப்பட்டது. விசாரணையின் போது, ஏற்கனவே வங்கியின் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு வைத்திருந்த சில வாடிக்கையாளர்களுக்கு வங்கி மற்றொரு கணக்கைத் திறந்ததை ரிசர்வ் வங்கி கண்டறிந்தது.
இது தவிர, வங்கி, வணிக முகவர்களுடன், அவர்களின் செயல்பாடுகளின் வரம்பிற்குள் வராத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு ஒப்பந்தமும் செய்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!