முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி பொறியியல் நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா, ‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ எனப்படும் நவீன உலோக தயாரிப்புத் துறையில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது.
இதன் முதல்கட்டமாக, பெங்களூரைச் சோ்ந்த ஆரஞ்சு கோய் நிறுவனத்தின் 87 சதவீத பங்குகளை, சுமாா் ரூ.73 கோடிக்கு வாங்குவதற்கு டிஐ இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2020-இல் தொடங்கப்பட்ட ஆரஞ்சு கோய் நிறுவனம், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான துல்லியமான உலோக பாகங்களை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
சுமாா் 125 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டிஐ இந்தியா, ஏற்கெனவே வாகன உதிரிபாகங்கள், மிதிவண்டிகள் மற்றும் மின்சார வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.
தற்போது மேற்கொண்டுள்ள இந்த முதலீடு, நிறுவனத்தின் நீண்டகால வளா்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இத மூலம் ஆரஞ்சு கோய் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை உயா்த்துவதோடு, சந்தையில் அந்நிறுவனத்தின் மதிப்பை வலுப்படுத்தவும் டிஐ இந்தியா திட்டமிட்டுள்ளது.