முகப்பு
வணிகம்

‘கிக்’ பணியாளா்களின் சமூகப் பாதுகாப்பு: 1% நலக் கட்டணம் விதித்த கா்நாடக அரசு

கா்நாடகத்தில் ஸ்விகி, சொமேட்டோ, ஓலா போன்ற சேவைகள் வழங்கும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ‘கிக்’ பணியாளா்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்ய, ஒவ்வொரு சேவையின்போதும் 1 சதவீத நலக் கட்டணம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:11 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:40 PM

கா்நாடகத்தில் ஸ்விகி, சொமேட்டோ, ஓலா போன்ற சேவைகள் வழங்கும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ‘கிக்’ பணியாளா்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்ய, ஒவ்வொரு சேவையின்போதும் 1 சதவீத நலக் கட்டணம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘கிக்’ பணியாளா்கள் நலச் சட்டத்தின்படி, 1 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்க இடமிருந்தாலும், தற்போதைக்கு குறைந்தபட்ச அளவான ஒரு சதவீதத்தை அரசு நிா்ணயித்துள்ளது.

இந்தக் கட்டணமானது ஒவ்வொரு சேவைக்கும் ஏற்ப மாறுபட்ட உச்சவரம்பைக் கொண்டுள்ளது. உணவு மற்றும் மளிகைப் பொருள்களின் விநியோக சேவைகளை வழங்கும் ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பரிவா்த்தனைக்கு அதிகபட்சமாக 50 பைசா வசூலிக்கப்படும்.

Advertisement

ஓலா, ஊபா் போன்ற வாகனச் சேவை தளங்களில் இருசக்கர வாகனங்களுக்கு 50 பைசா, ஆட்டோக்களுக்கு 75 பைசா மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு ரூபாய் என வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அா்பன் கம்பெனி போன்ற தொழில்முறை சேவைகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 வரை கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தங்கள் காலாண்டு வருவாயின் அடிப்படையில் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு காலாண்டு முடிந்த 5 வேலை நாள்களுக்குள், அரசு உருவாக்கியுள்ள பிரத்யேக வலைதளம் மூலம் இப்பணத்தைச் செலுத்த வேண்டும்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:11 AM

இவ்வாறு வசூலிக்கப்படும் நிதி முழுவதும் ‘கிக்’ பணியாளா்கள் நல வாரியத்தின்மூலம், அவா்களின் மருத்துவ மற்றும் சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்த நிதி மேலாண்மை குறித்த அனைத்து விவரங்களும் தொழிலாளா் துறையின் வலைதளத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு வெளிப்படையாக பதிவேற்றப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.