17. ஹலோ, அலோபதியா? - 2
உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் ஒன்று இறந்துவிடுவீர்கள், அல்லது உயிருடன் இருப்பீர்கள். உயிர் பிழைத்த பிறகு இதயவியல் நிபுணரின் ஆலோசனை பெற்று செயல்பட்டாலோ, மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்துகொண்டாலோ இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்கிறார்! மாரடைப்பை மீறி நீங்கள் உயிருடன் இருந்து, அலோபதி டாக்டர்கள் யாரையும் பார்க்கவில்லை என்றால், மூன்று மாதங்களில் உங்களுக்கு புதிய, ஆரோக்கியமான இதயம் கிடைத்துவிடும் என்கிறார்!
ஒரு மனிதன் ஒரு டாக்டரைப் பார்த்துவிட்டு வந்தபிறகு நோயாளியாகிவிடுகிறான். மீண்டும் அவனால் மனிதனாக முடிவதே இல்லை. - டாக்டர் பி.எம்.ஹெக்டே. |
பத்மபூஷன் டாக்டர் பி.எம்.ஹெக்டே
இவரைப் பற்றியும் இவரது தகுதிகள் பற்றியும் ஏற்கெனவே கொஞ்சம் சொல்லிவிட்டேன். 1956-ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியைத் துவங்கிய ஹெக்டே, உலகின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் பயின்று இன்று ஹார்வர்டில் இதயவியல் ஆலோசகராகவும் இருக்கிறார். அலோபதி மருத்துவராக வாழ்வைத் துவங்கி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் பணியாற்றிய இவர், மருத்துவத் துறைக்கான பி.சி.ராய் விருது, பத்மபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றவர். மணிபால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், இப்போது ஊர் ஊராகச் சென்று ஆங்கில மருத்துவத்துக்கு எதிராகப் பேசி வருகிறார்! ஆயுர்வேதம்தான் ‘மருத்துவ ஞானத்தின் தாய்’ என்று கூறுகிறார்!
உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் ஒன்று இறந்துவிடுவீர்கள், அல்லது உயிருடன் இருப்பீர்கள். உயிர் பிழைத்த பிறகு இதயவியல் நிபுணரின் ஆலோசனை பெற்று செயல்பட்டாலோ, மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்துகொண்டாலோ இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்கிறார்! மாரடைப்பை மீறி நீங்கள் உயிருடன் இருந்து, அலோபதி டாக்டர்கள் யாரையும் பார்க்கவில்லை என்றால், மூன்று மாதங்களில் உங்களுக்கு புதிய, ஆரோக்கியமான இதயம் கிடைத்துவிடும் என்கிறார்! Modern Science and Spirituality என்ற அவரது காணொளி உரையை யூ-ட்யூபில் யாரும் பார்க்கலாம். அலோபதி மருத்துவர்களின் அநியாயத்தையும் அறியாமையையும் பற்றி What Doctor Don’t Get to Study at Medical School என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் சில நிகழ்வுகளையும் தகவல்களையும் இங்கே பகிர்ந்துகொள்வது அலோபதி பற்றிய நம் புரிதலை நிச்சயம் விரிவாக்கும்.
கேன்ஸர் என்பது ஒரு நோயா
கேன்ஸர் என்பது ஒரு பயங்கரமான நோயாகவே இன்று கருதப்படுகிறது. என் உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்துபோனார். அவர் கேன்ஸரால் இறந்துபோனார் என்று சொல்லப்பட்டது. அவர் வாழ்ந்தபோது அவருக்கு கேன்ஸருக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. ஆனால் சித்தா, ஆயுர்வேதா, அலோபதி என்று மாற்றி மாற்றி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என் சகோதரி ஒருவர் கேன்ஸர் என்று தன் வாயால் சொல்லமாட்டார். அவருக்கு ‘மேப்படியான்’ வந்திருக்காம் என்பார்! மேற்படியான் என்றால் கேன்ஸர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்! கேன்ஸர் என்பது அஞ்சப்படுகிற, வெறுக்கப்படுகிற, அது வந்தால் நிச்சயம் சாவுதான் என்று நம்பப்படுகிற ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது. அது தொடர்பாக அலோபதி என்ன சொல்கிறது?
கேன்ஸர் பற்றி டாக்டர் ஹெக்டே கூறுவது நம் சிந்தனைக்கு உரியது. கேன்ஸர் என்ற பயங்கர நோயால் பலர் இறந்துபோகிறார்களே என்றால், இறப்புக்கும் எந்த ஒரு நோய்க்கும் நேரடியான தொடர்பு ஒன்றுமில்லை. இறப்பு என்பது நிச்சயமானது. அது நிகழ்ந்துதான் தீரும். இறப்புக்கும் நோய்க்கும் பெரிய தொடர்பு ஒன்றுமில்லை என்கிறார் ஹெக்டே! உண்மைதானே? நோயே இல்லாமல் ஆரோக்கியமாக நாம் இருந்தாலும் ஒருநாள் இறந்துபோய்த்தானே ஆக வேண்டும்? என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது எனக்கு. தன் வாழ்நாள் முழுவதும் படுஆரோக்கியமாக இருந்த அவர் தன் எண்பதுகளில் இறந்தார். ரொம்ப எளிதாக. தூக்கத்திலேயே! To cease upon the midnight, with no pain என்று கவிஞன் கீட்ஸ் தன் கவிதையில் சொன்னதைப்போல. அவருடைய வாழ்முறையின் விசேஷம் என்னவென்றால், அவர் மதிய உணவு எப்போதுமே நெய்ச்சோறு அல்லது பிரியாணிதான்!
சரி கேன்ஸருக்கு வருவோம். ஐ மீன், அந்தப் பிரச்னை பற்றித் தெரிந்துகொள்வோம். கேன்ஸர் என்பது ஒரு நோய் அல்ல, அது நம் உயிரணுக்கள் முதுமை அடையும் இயற்கையான ஒரு நிகழ்வு என்கிறார் ஹெக்டே. நமக்கு வயதாகி நாம் தொண்டுகிழவன் அல்லது கிழவியாவதைப் பற்றி ஹெக்டே இங்கே பேசவில்லை. நம் உயிரணுக்களுக்கு வயதாவதைப் பற்றிப் பேசுகிறார். நம் உயிரணுக்களுக்கு வயதாகும் பல்வேறு காலகட்டங்களை வைத்து அவற்றை biological cancer, clinical cancer, symptomatic cancer என்று மூன்று நிலைகளில் விளக்குகிறார். அதனால்தான் குழந்தைகளுக்குக்கூட கேன்ஸர் வருகிறது என்றும் கூறுகிறார்.
இந்த உலகிலிருந்து விடுதலை பெற்று போய்ச்சேர வேண்டிய ஒரு தேதி நம் அனைவருக்கும் ஆண்டவனால் விதிக்கப்பட்டிருப்பதுபோல, நமக்குள் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் மரண தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் இறந்துகொண்டும், பிறந்துகொண்டும் உள்ளன, நமக்குத் தெரியாமல்.
ஒரு உயிரணு தன் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டால், ‘ஏய், நீ நாளைக்கு ஐந்து மணிக்கு உயிரை விட வேண்டும்’ என்ற செய்தி அல்லது உத்தரவு அதற்கு அனுப்பப்படும்! அப்படியான செய்தியை / உத்தரவை அனுப்பும் உயிரணுவுக்கு ‘தற்கொலை ஜீன்’ (suicide gene) என்று பெயர்! அடடா, நம் உடம்புக்குள்ளேயே தற்கொலைப்படைகள்!
ஏதோ ஒரு காரணத்தினால் இந்தத் தற்கொலை ஜீன்கள் மரணச் செய்தியை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட உயிரணுவுக்கு அறிவிக்காமல் போனாலோ, அல்லது செய்தியைக் கொண்டுசெல்கின்ற ‘என்ஸைம்’கள் சரியாகச் செயல்பட முடியாமல் போனாலோ, ‘செத்துப்போ’ என்ற உத்தரவு கிடைக்காத அந்த அதிர்ஷ்டக்கார உயிரணு தன் காலத்தை மீறி உயிர் வாழும்! ஆனால், முன்பு செய்துகொண்டிருந்த பிரதியெடுத்து பல்கிப் பெருகும் வேலையை அதனால் செய்யமுடியாது! அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் செத்துப்போகாமல் தப்பித்துக்கொண்ட உயிரணு, தனது டி.என்.ஏ.வை ஒரு ‘ரவுடி டி.என்.ஏ.வாக’ (rogue DNA) மாற்றிவிடும். இந்த ரவுடிகள்தான் பின்னாளில் கேன்ஸராக உருவெடுக்கும் சாத்தியம் கொண்டவை. இதைத்தான் ‘பயலாஜிகல் கேன்ஸர்’ என்கிறார் ஹெக்டே.
எனவே எல்லா மனிதர்களுக்கும் கேன்ஸர் வர வாய்ப்பிருக்கிறது! அது வந்தது தெரியாமல், ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு பல ஆண்டுகளுக்கு சந்தோஷமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது! என்ன, பயமுறுத்துவதுபோல் தோன்றுகிறதா? அப்படியில்லை. நம் மனநிலையும் வாழ்முறையும் சரியாக இருக்கும்பட்சம், நம் ஆரோக்கியம் கெடவே கெடாது.
மேலே குறிப்பிட்ட ரவுடி டி.என்.ஏ.க்கள் ஆயிரக்கணக்கில் தங்களைத் தாங்களே பிரதிகள் எடுத்துப் பல்கிப்பெருகி ஒரு கட்டியைப்போல உடலில் எங்காவது தங்கினால் / தேங்கினால் ‘இதோ, இங்கே கேன்ஸர் கட்டி உள்ளது’ என்று டாக்டரால் அடையாளப்படுத்த முடியும். இதைத்தான் ‘க்ளினிகல் கேன்ஸர்’ என்கின்றனர். ஆனால், இந்த ‘க்ளினிகல் கேன்ஸர்’கூட இருப்பதே தெரியாமல், பிரச்னை பண்ணாமல் உள்ளேயே பல ஆண்டுகளுக்குத் தூங்கிக்கொண்டு கிடக்கும் வாய்ப்புண்டு. ஆனால், அது உடம்பின் பல பகுதிகளில் வேகமாக வளர்வதற்கும், ஆங்காங்கே பல தொந்தரவுகளைக் கொடுப்பதற்கும் முடிவுசெய்து அதை செயலாக்கவும் துவங்கிவிட்டால் அந்த நிலையை ‘அறிகுறிக் கேன்ஸர்’ (சிம்ப்டமேட்டிக்) என்று மருத்துவ உலகம் புரிந்துகொள்கிறது. இந்தநிலையிலும் இது பல ஆண்டுகளுக்குத் தெரியாமலே இருக்க வாய்ப்புண்டு.
எனவே, கேன்ஸரை நாங்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டோம் என்று கூறுவது, மருத்துவ உலகில் நிலவி வரும் ‘இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய பொய்யாகும்’ (the greatest myth of the century) என்று அடித்துக்கூறுகிறார் ஹெக்டே! எனவே, ‘ஆரம்ப நிலையிலேயே’ கண்டறியப்பட்ட கேன்ஸரும், உயிரியல் ரீதியாக பல மாமாங்கங்களுக்கு முன்பு உண்டானதாகவே இருக்கும்!
கேன்ஸரின் தொந்தரவுகளில் இருந்து கடுமைத் தணிவும் தாற்காலிக நிவாரணமும் (palliation) கொடுக்கும் மருந்துகள்தான் ஆங்கில மருத்துவத்தில் உண்டே தவிர, கேன்ஸரை குணப்படுத்தும் மருந்தே கிடையாது என்றும் வெளிப்படையாகக் கூறுவதோடு ‘பெரும்பாலான கேன்ஸர்களை ஆங்கில மருத்துவத்தால் தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது’ என்று நியூயார்க்கின் ஸ்லோன் கெட்டரிங் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டின் (Sloane Kettering Cancer Institute) முன்னாள் தலைவர் தாமஸ் லீவிஸ் சொன்னதையும் மேற்கோள் காட்டுகிறார் ஹெக்டே. மருந்து மாத்திரைகள் ஏற்படுத்தும் ADR (Adverse Drug Reaction) எனப்படும் எதிர்விளைவுகளால்தான் பெரும்பாலானவர்கள் இறந்துபோகிறார்கள் என்று துணிச்சலாகவும் நேர்மையாகவும் கூறுகிறார் ஹெக்டே.
தாமஸ் லீவிஸ்
ஆனால், கேன்ஸரிலிருந்து குணப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் ஆறு லட்சம் பெண்களுக்குக் கர்ப்பப்பை நீக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் தருகிறார். அறுவை சிகிச்சைகள் செய்து கேன்ஸரை குணப்படுத்த முடியும் என்பது பொய் என்பதற்கான பல ஆதாரங்களை தன் நூலில் கொடுக்கிறார். உதாரணமாக, உலகப் புகழ்பெற்ற உளவியலாளரான சிக்மண்ட் ஃப்ராய்ட், தன் வாய்க்குள் இருந்த(தாக நம்பப்பட்ட) கேன்ஸருக்காக முப்பத்து மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்! ஆனாலும் அவருடைய பிரச்னை தீரவில்லை!
சிக்மண்ட் ஃப்ராய்ட்
கேன்ஸருக்கான சிகிச்சை என்ற பெயரில் செய்யப்படும் கீமோதெரபியும் ரேடியேஷனும் கேன்ஸர் வந்த உயிரணுக்களை மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் சாதாரண உயிரணுக்களையும் கொன்றுவிடும் என்று எச்சரிக்கிறார். இன்றையை காலகட்டத்தில், பயன்படுத்தப்படும் ஊசி மூலமாக உடல் திசுக்கள் ஆய்வு (needle biopsy) என்ற தொழில்நுட்பம் மூலம் கேன்ஸர் மேலும் பரவுவது மட்டுமின்றி, அது செய்யப்பட்ட பலர் செத்துப்போயிருக்கின்றனர் என்றும் கூறுகிறார்.
அப்படியானால் கேன்ஸரிலிருந்து ஒரு மனிதன் விடுபடுவதற்கு என்னதான் வழி?
சந்தோஷமாக இருப்பது, சக மனிதனை நேசிப்பது – இதுதான் வழி. நம்முடைய கோடிக்கணக்கான உயிரணுக்களும் ஒன்றை ஒன்று நேசிக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் உயிரும் அறிவும் உள்ளது. கோடிக்கணக்கான அறிவார்ந்த உயிர்களின் தொகுப்புக் காலனிதான் மனிதன்!
ஒரு பயோஃபோடோன் கேமராவினால் (biophoton camera) நம் உயிரணுக்களைப் படமெடுத்தால், அவை அனைத்தும் ஒன்றாக, ஒற்றுமையாக இயங்குவதைக் காணலாம். ஒற்றுமையாக இல்லையென்றால் நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம். நம் உடலின் ஆற்றல் வடிவம் சிதைவுற்றிருப்பதன் அடையாளம் அது என்று ஹெக்டே சொல்லும்போது, You are a crowd என்று ஓஷோ சொல்வது நினைவுக்கு வருகிறது. அவர் வேறு அர்த்தத்தில் சொல்கிறார். ஹெக்டே சொல்வது உடலியல் ரீதியாக.
நாம் அடுத்தவரை வெறுக்கும்போது, அந்த வெறுப்பானது ப்ளேட்லெட்டுகள் என்று சொல்லப்படும் சிறிய ரத்தத்தட்டுக்கள் போன்ற அணுக்களில் சிறுஉறைகட்டிகளை (clot) ஏற்படுத்துகிறது என்று Grudgitis என்ற கட்டுரையில் கூறுகிறார் ஹெக்டே. ஆங்கிலத்தில் grudge என்ற சொல்லுக்கு வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, உட்பகை, விரோதம் என்றெல்லாம் அர்த்தம். அலோபதியில் பல நோய்களின் பெயர்கள் –itis என்றுதான் முடியும். அப்பெண்டிசைட்டிஸ், ஆர்த்ரைட்டிஸ் இப்படி. எனவே grudge-ம் பல நோய்களை ஏற்படுத்தும் ஒருவகை நோய்தான் என்று ஒரு புதிய சொல்லையே உருவாக்கியிருக்கிறார் படைப்பாளி ஹெக்டே!
நாம் அடுத்தவரை வெறுக்கும்போது நம் உயிரணுக்கள் தங்களையே வெறுக்க ஆரம்பிக்கின்றன. அதன் விளைவாகத்தான் கேன்ஸர் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே சந்தோஷமாக இருங்கள், யாரையும் வெறுக்காதீர்கள், சக மனிதர்களை நேசியுங்கள், இயேசு சொன்னதுபோல எதிரிகளையும் நேசியுங்கள். இப்படி நீங்கள் வாழ்ந்தால், உங்களுக்கு கேன்ஸரோ வேறெந்த நோய்களோ வராது. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது. உடலின் குணமாக்கும் கலைக்கு நமது வாழ்முறைகளால் நாம் உதவி செய்யலாம் என்கிறார் ஹெக்டே!
புகழ்வாய்ந்த ஒரு அலோபதி மருத்துவர் பேசுவது மாதிரியா இருக்கிறது? ஒரு சூஃபி அல்லது ஒரு சித்தர் பேசுவதைப்போல இருக்கிறது. ஆனால், தான் சொல்ல வரும் கருத்துகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான விளக்கமும் நிரூபணங்களும் காட்டுவது டாக்டர் ஹெக்டேயின் சிறப்பு.
முதல் மனித இதயமாற்று அறுவை சிகிச்சை
இது நடந்தது தென் ஆப்பிரிக்காவில். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பெயர் கிறிஸ்டியான் பர்னார்ட் (Christiaan Barnard). அமெரிக்காவிலும் லண்டனிலும் இதயவியல் படித்துவிட்டு வந்தவர். ஆள் கொஞ்சம் திமிர் பிடித்தவர். மருத்துவத் துறையில் யார் எதைச் செய்தாலும், தன்னாலும் அதே மாதிரி செய்யமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். ஒரு நாய்க்கு இரண்டு தலைகளை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதாக ஒரு ரஷ்ய மருத்துவர் சொன்னபோது, அதைப் பொறுக்க முடியாத பர்னார்ட் அதேபோல இன்னொரு நாய்க்கு இரண்டு தலைகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, தன்னாலும் அவ்வாறு செய்யமுடியும் என்று நிரூபித்தார்! நாய்கள் பாவம்! தன் நாய்த்தலை ‘சாதனை’யை வெகுவாக விளம்பரப்படுத்தவும் செய்தார் பர்னார்ட்.
கிறிஸ்டியான் பர்னார்ட்
நாய்க்கு உபரியாக ஒரு தலை பொருத்திய சாதனையைவிட அரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பு அவருக்கு வந்தது. லூயி வாஷ்கன்ஸ்கி (Louis Washkansky) என்று ஒரு நோயாளி. ஒரு பலசரக்கு வணிகர். 54 வயது. தீவிரமான சர்க்கரை நோயாலும், தீர்க்கமுடியாத (என்று சொல்லப்பட்ட) இதய நோயாலும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். டெனிஸ் டர்வால் (Denise Darvall) என்ற இளம் பெண்ணுக்கு ஒரு விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு மூளைச்சாவு (clinically dead) என்று பர்னார்ட் முடிவு செய்தார். டர்வாலின் தந்தையிடமிருந்து இதயத்தை மாற்றி வைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்ட பர்னார்ட், உடனே காரியத்தில் இறங்கினார். டர்வால் அடிபட்டது டிசம்பர் 2, 1967. இதயமாற்று அறுவை சிகிச்சை நடந்தது அதற்கு மறுநாள்!
லூயி வாஷ்கன்ஸ்கி
டெனிஸ் டர்வால்
ஆனால், மூளைச்சாவு என்று முடிவு செய்யப்பட்ட டர்வாலின் இதயம் துடித்துக்கொண்டுதான் இருந்தது! தன் டாக்டர் தம்பி சொன்ன யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு, டர்வாலுக்கு பொட்டாசியம் ஊசி போட்டு அந்த இதயத்தின் துடிப்பை நிறுத்தினார் பர்னார்ட்! அதன்பிறகு அந்த இதயத்தை எடுத்து லூயிக்குப் பொருத்தினார். அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நடந்தது! லூயியின் உடலில் புதிய இதயத்துக்கு எதிராக அவரது உடலின் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாமல் இருப்பதற்கான மருந்துகளையும் (immunosuppressive drugs) கொடுத்தார்! ஆபரேஷன் சக்சஸ், ஆனால் பேஷன்ட் டைடு! ஆமாம். சரியாக பதினெட்டு நாள்களுக்குப்பின் நிமோனியா வந்து லூயி இறந்துபோனார். ஆனால், அவர் இறந்த விஷயம் மீடியாவுக்குப் போகவில்லை! இந்தத் தகவல்களை, மேலே சொன்ன ஹெக்டேயின் நூலிலும் இணையத்திலும் காணலாம்.
உண்மையில், அங்கே இரண்டு கொலைகள் அரங்கேறியிருந்தன என்றே கூற வேண்டும். ஒன்று டர்வால் என்ற பெண்ணுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது என்று சொல்லி, இயங்கிக்கொண்டிருந்த அவரது இதயத்தை நிறுத்தியது. மூளைச்சாவு என்ற வரையறை, புரிந்துகொள்ளல் எப்போதுமே தவறானது. மூளைச்சாவு ஏற்பட்டதாகச் சொல்லி உறுப்புகள் பிடுங்கப்பட்டவர்கள், அப்படிச் செய்யப்படாமல் இருந்திருந்தால், நீண்டகாலம் ஆரோக்கியமாக உயிர் வாந்திருப்பார்கள்; மனித உடலானது உறுப்பு உறுப்பாக தனித்தனியாக செயல்படுவதில்லை. அது ‘ஒட்டுமொத்தமான பரிபூரணமாகவே’ செயல்படுகிறது என்று நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மட்டுமல்ல, டாக்டர் ஹெக்டேயும் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல. தென் ஆப்பிரிக்காவில் விபத்தில் யாருக்குத் தீவிரமாக அடிபட்டாலும், அவர் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியாக்கப்பட்டு அவருடைய உறுப்புகளை டாக்டர் பர்னார்ட் மற்றவர்களுக்குப் பொருத்திப் புகழடைந்துகொள்வார் என்று கூறுவதோடு, பர்னார்ட் செய்த இன்னொரு அநியாயத்தையும் தன் நூலில் விவரிக்கிறார் ஹெக்டே. அது என்ன?
பார்க்கலாம்…