பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 3
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்ஆண்டு கொண்டு அருள அழகு உறு திருவடி
10
பாடலின்பம்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டு கொண்டு அருள அழகு உறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரி மா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எம் கோன் அருள் வழி இருப்பத்
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டு கொண்டு அருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெரு நல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்
ஆங்கு அது தன்னில் அடியவட்காகப்
பாங்காய் மண் சுமந்து அருளிய பரிசும்...
பொருளின்பம்
இவ்வரிகள் இறைவன் நரியைப் பரியாக்கிய வரலாற்றையும், பிட்டுக்கு மண் சுமந்ததையும் குறிப்பிடுகின்றன.
நரிகளைக் குதிரையாக்கி எனக்கு நன்மை செய்தாயே,
உன் அழகிய திருவடிகளால் பாண்டியனை ஆட்கொள்ள விரும்பி, அவனுக்குக் குதிரை விற்கிறவனாக வந்தாயே,
அந்தக் குதிரைகளுக்கு இணையாக அவன் தங்கம் தர முயன்றபோது, அதனை மறுத்தாயே, அவனை அருள்வழியில் செலுத்துவது ஒன்றே உன்னுடைய நோக்கம் என இருந்தாயே,
என் தலைவா, பாண்டியன் உள்ளத்தில் சோதியுருவில் தோன்றி அவனை நல்ல வழியில் செலுத்தியவனே,
நீ அறவழியில் நடக்கிற அந்தணனாக என்னையும் ஆட்கொண்டு அருளினாயே, இந்திரசால வித்தையைக் காட்டினாயே,
நல்ல மதுரை மாநகரில் குதிரைச் சேவகனாக வந்து, பின்னர் அங்கே அடியவர்களுக்காக அழகாகப் பிட்டுக்கு மண் சுமந்தாயே,
சொல்லின்பம்
பரி: குதிரை
ஈண்டு: இங்கே
கனகம்: தங்கம்
இசைய: வழங்க
கோன்: அரசன்
தோற்றிய: தோன்றிய
அந்தணன்: மறைவழி நடப்பவன்
பாங்கு: அழகு