பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 4
திருவிடைமருதூரில் அடியவர்களுடன் இருந்து தன் தூய்மையான பாதங்களை அவர்கள் தலைமேல் வைத்து அருளிய தன்மை கொண்டவனே,
11
பாடலின்பம்
தேன் அமர் சோலை திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்…
பொருளின்பம்
தேன் நிறைந்த மலர்ச்சோலைகளைக் கொண்ட திருவாரூரில் ஞானம் தந்து நன்மை செய்தவனே,
திருவிடைமருதூரில் அடியவர்களுடன் இருந்து தன் தூய்மையான பாதங்களை அவர்கள் தலைமேல் வைத்து அருளிய தன்மை கொண்டவனே,
திருவேகம்பம், அதாவது காஞ்சி நகரில் தன்னுடைய இயல்புத்தன்மையுடன் எழுந்தருளி, தன் உடலில் ஒரு பாகத்தை உமையாளுக்காகக் கொடுத்த தன்மை கொண்டவனே,
திருவாஞ்சியத்தில் சிறப்புடன் திகழ்ந்து, மணம் நிறைந்த கூந்தலைக் கொண்ட உமையம்மையோடு மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் அழகனே,
சொல்லின்பம்
ஈண்ட: கூட்டமாகச் சேர
படிமம்: தூய்மை
பரிசு: தன்மை
சீர்: சிறப்பு
மரு: மணம்/ வாசனை
ஆர்: நிறைந்த
குழல்: கூந்தல்
குழலி: கூந்தலைக் கொண்டவள்
வண்ணம்: அழகு