முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 3 – திருவண்டப் பகுதி 2

நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான். இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்! அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

16

பாடலின்பம்

அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு

மதியில் தண்மை வைத்தோன், திண் திறல்

தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன், மேதகு

காலின் ஊக்கம் கண்டோன், நிழல் திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட

மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று

எனைப்பல கோடி எனைப்பல பிறவும்

அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃது ஆன்று

முன்னோன் காண்க, முழுதோன் காண்க,

தன் நேர் இல்லோன் தானே காண்க.
 

பொருளின்பம்

சூரியனில் ஒளியை அமைத்தவன், அழகிய சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன், ஆற்றல் மிகுந்த நெருப்பில் வெப்பத்தைச் செய்தவன், பொய்யில்லாத மெய்யாகத் திகழ்கிற வானத்தில் இவையெல்லாம் கலக்கச் செய்தவன், மேலே பரவிச் செல்லும் காற்றுக்கு வேகம் கூட்டியவன், பிம்பங்கள் விழுகிற நீரில் இனிய சுவையைச் சேர்த்தவன், அனைவரும் காணுகிற மண்ணில் வலிமையை வைத்தவன், பலவிதமான பலகோடி உயிர்களை அவற்றுக்குரிய இடங்களில் பொருத்தமாக வைத்தவன்...

இவைமட்டுமா? அனைத்துக்கும் முதல்வன் அவன்தான், முழுமையானவனும் அவன்தான், தனக்கு நிகர் என்று சொல்லக்கூடிய யாருமே இல்லாத தனித்துவமான சிறந்தவன் அவன், அத்தகைய சிவபெருமானைக் காணுங்கள்!
 

சொல்லின்பம்

அருக்கன்: சூரியன்

சோதி: ஒளி

திரு: அழகு

மதி: சந்திரன்

தண்மை: குளிர்ச்சி

திண்: திண்மை/வலிமை

மே: மேலே

கால்: காற்று

ஊக்கம்: வேகம்

நிழல்: நீரில் விழும் பிம்பம்

அவ்வயின்: அங்கே

அஃது ஆன்று: அது தவிர (வேறு சில விஷயங்களும் உண்டு என்கிற பொருள்)

முழு கட்டுரையைப் படிக்க →