பகுதி 19 – திருத்தசாங்கம் - 1
தச+அங்கம்=தசாங்கம், அதாவது, பத்து பகுதிகள் / பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவது
தச+அங்கம்=தசாங்கம், அதாவது, பத்து பகுதிகள் / பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவது. ஓர் அரசனின் நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்கிற பத்து உறுப்புகளைப் பெருமைப்படுத்திப் பாடும் பாடல்களின் தொகுப்பு தசாங்கம் எனப்படும். உலகின் அரசனாகிய இறைவனையும் இவ்வகையில் பாடி வணங்கலாம். இங்கே சிவபெருமானின் சிறப்பு பாடப்பட்டுள்ளதால், இதனைத் ‘திருத்தசாங்கம்’ என்று அழைக்கிறோம்.
இதில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலைப் பாடும் தலைவி (அதாவது, மாணிக்கவாசகர்) ஒரு கிளியிடம் பேசுவதுபோல் இவை அமைந்துள்ளன. இவை நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. தில்லையில் அருளப்பட்டவை.
124
பாடலின்பம்
ஏர்ஆர் இளங்கிளியே, எங்கள் பெருந்துறைக்கோன்
சீர்ஆர் திருநாமம் தேர்ந்துஉரையாய், ஆரூரன்,
செம்பெருமான், வெண்மலரான், பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.
*
ஏதம்இலா இன்சொல் மரகதமே, ஏழ்பொழிற்கும்
நாதன், நமை ஆளுடையான் நாடுஉரையாய், காதலவர்க்(கு)
அன்புஆண்டு மீளா அருள்புரிவான் நாடுஎன்றும்
தென்பாண்டி நாடே, தெளி.
பொருளின்பம்
சிவபெருமானின் பெயர்:
அழகிய இளங்கிளியே,
திருப்பெருந்துறையின் தலைவனாகிய எங்கள் பெருமானின் சிறப்பு மிகுந்த திருநாமத்தை நீ போற்றிச் சொல்,
வெள்ளைத் தாமரையில் விளங்குகின்ற பிரம்மனும், பாற்கடலில் பள்ளிகொள்ளுகின்ற திருமாலும், அவனை ‘ஆரூரன்’ என்பார்கள், ‘செம்மேனியன்’ என்பார்கள், ‘எங்கள் தலைவன்’ என்பார்கள், ‘தேவர்களின் தலைவன்’ என்பார்கள், நீயும் அவ்வாறே சொல்.
*
சிவபெருமானின் நாடு:
குற்றமில்லாத இனிய சொற்களைப் பேசும் கிளியே,
ஏழு உலகங்களின் தலைவன், நம்மை ஆளுகின்ற அந்தச் சிவபெருமானின் நாடு எது என்று நீ சொல்,
தன்மீது அன்புவைத்தவர்களையெல்லாம் அன்பாலேயே ஆளுகிறவன், அவர்கள் மீண்டும் பிறக்காதபடி மோட்சமாகிய வரத்தை அருளுகிறவன், அந்தச் சிவபெருமானுடைய நாடு, தென்பாண்டி நாடு என்று தெளிவாகச் சொல்.
சொல்லின்பம்
ஏர்: அழகு
கோன்: தலைவன்
சீர்: சிறப்பு
தேர்ந்து: உணர்ந்து
செப்புவபோல்: சொல்வதுபோல்
பிரான்: தலைவன்
ஏதம்: குற்றம்
மரகதம்: கிளி
பொழில்: சோலை/ இங்கே உலகத்தைக் குறிக்கிறது
நாதன்: தலைவன்