பகுதி 12 – திருச்சாழல் - 7
எம்பெருமானுக்குப் புள்ளிகளைக் கொண்ட புலியின் தோல்தான் ஆடை, ஆலகால விஷத்தை அவன் உண்கிறான்,
‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.
85
பாடலின்பம்
அம்பரமாம் புள்ளித்தோல், ஆல்ஆலம் ஆர்அமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்குஅறிய இயம்பேடீ.
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான்அறியாத் தன்மையன் காண் சாழலோ.
*
அரும்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கனையும்
இருந்து அவருக்கு அருளும்அது எனக்குஅறிய இயம்பேடீ.
அரும்தவருக்கு அறம்முதல் நான்கு அன்று அருளிச் செய்திலனேல்
திருந்து அவருக்கு உலகுஇயற்கை தெரியா காண் சாழலோ.
பொருளின்பம்
ஒருத்தி: எம்பெருமானுக்குப் புள்ளிகளைக் கொண்ட புலியின் தோல்தான் ஆடை, ஆலகால விஷத்தை அவன் உண்கிறான், இதெல்லாம் ஏன்? எனக்கு விளக்கிச் சொல்.
இன்னொருத்தி: எம்பெருமான் எதை உடுத்தினாலும், எதை உண்டாலும், தன் சிறப்பைத் தானே அறியாத தன்மை கொண்டவன், இதை நீ அறிவாய்.
ஒருத்தி: அரிய தவம் செய்த நான்கு முனிவர்களுக்குக் கல்லால மரத்தின்கீழிருந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அருளினான் சிவபெருமான், இது ஏன்? எனக்குச் சொல்வாய்.
இன்னொருத்தி: அரிய தவம் செய்த அவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் சிவன் அருளிச்செய்யவில்லை என்றால், திருந்திய தன்மையுள்ள அந்த நால்வருக்கும் இந்த உலகத்தின் இயற்கை தெரியாமல்போயிருக்கும், ஆகவேதான் சிவபெருமான் அப்படி அருள் செய்தான்.
சொல்லின்பம்
அம்பரம்: ஆடை
ஆலாலம்: ஆலகால விஷம்
சதுர்: திறமை
இயம்பு: சொல்
அரும்தவர்: அரிய தவம் செய்தவர்