முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 15 – திருத்தோணோக்கம் 3

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீண்ட ஆகாயம், நிலா, சூரியன், அறிவுமயமான ஜீவாத்மா என்கிற எட்டிலும் எட்டு வகையாகக் கலந்து நிலைத்திருப்பவன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

100

பாடலின்பம்

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள்விசும்பு, நிலா, பகலோன்,

புலன்ஆய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்,

உலகு ஏழுஎனத் திசை பத்துஎனத் தான் ஒருவனுமே

பலஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ.

*

புத்தன்முதலாய புல் அறிவின் பல்சமயம்

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்

சித்தம் சிவம்ஆக்கிச் செய்தனவே தவம்ஆக்கும்

அத்தன் கருணையினால் தோள்நோக்கம் ஆடாமோ.

பொருளின்பம்

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீண்ட ஆகாயம், நிலா, சூரியன், அறிவுமயமான ஜீவாத்மா என்கிற எட்டிலும் எட்டு வகையாகக் கலந்து நிலைத்திருப்பவன் சிவபெருமான். அவன் ஒருவன்தான், ஆனால் ஏழு உலகங்கள், பத்துத் திசைகளாகவும் அவனே திகழ்கிறான், இப்படி அவன் பலவாகத் திகழும் தன்மையைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

*

புத்தமதம் போன்ற சிற்றறிவைக் கொண்ட பல மதங்கள் உள்ளன. அவற்றில் உள்ளவர்கள் பலர் மதவெறி பிடித்து, தங்கள் மதத்தைப்பற்றிய முழுமையான உணர்வுகூட இல்லாமல் தடுமாறி நிற்கிறார்கள்.

எம்பெருமான் என் சித்தத்தைச் சிவமாக்கினான், என் செயல்களையெல்லாம் தவமாக்கினான், அந்தத் தந்தையின் கருணையினால் நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

சொல்லின்பம்

விசும்பு: வானம்

பகலோன்: சூரியன்

புணர்ந்துநின்றான்: கலந்துநின்றான்

நின்றவா: நின்ற தன்மை

புல் அறிவு: சிறிய அறிவு

பல்: பல

தட்டுளுப்பு: தடுமாற்றம்

சித்தம்: உள்ளம்

அத்தன்: தந்தை

முழு கட்டுரையைப் படிக்க →