பகுதி - 332
‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும்
‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும் ஐக்கிய நிலையைக் கோரும் பாடல் இது. சுவாமிமலைத் திருப்புகழ். அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள்; 1, 2, 4//8, 9, 11//15, 16, 18 ஆகியவை நெடில். மற்ற அனைத்தும் குறில். ஒற்றைச் சேர்த்து 7, 14, 21 ஆகிய எழுத்துகள் வல்லொற்று. இடையினத்தில் ரகர ஒற்று மட்டும் (ர்) அவ்வப்போது பயில்கிறது. மெல்லின ஒற்று இல்லாத தாளக்கட்டு. ‘நாலாறு நாலு’ ‘நாலாரும் ஆகமம்’ ‘ஷடாதரம்’ என்று ஏகப்பட்ட கணக்குகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. விவரங்களைப் பொருளைப் பார்க்கும்போது காண்போம்.
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த தனதான
Advertisement
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு னருள்கூர
நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற பெருமாளே.