முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 337

ஆகாயத்திலும், எல்லாத் திசைகளிலும் நிறைந்திருப்பவரும்; காயாம்பூ நிறத்தவருமான திருமாலுக்கு மருகனே!

Updated On : 19 ஆகஸ்ட், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

பதச் சேதம்

சொற் பொருள்

மதன் ஏவிய கணையால் இரு வினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன்

Advertisement

 

மதன்: மன்மதன்; இருவினை: நல்வினை, தீவினை; புவி கடல்: நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதம்; சாரம்: சஞ்சாரம், கிரகங்களின் இயக்கம்; நடமாடுக முடியாதேன்: நடமாடுவதற்கு முடியாதவன்;

மன மாயையோடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநுபூதியின் அருள் மேவி

 

காழ்: காழ்த்த, முதிர்ந்த, முற்றிய; மூதுடை மலம்: பழமையானதான ஆணவ மலம்; ஞானக: ஞான அக; அநுபூதி: அனுபவ ஞானம்;

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் மு(ன்)னே பரிபூரண கிருபாகரம் உடன் ஞான

 

பரிபூரண கிருபாகரம்: நிறைந்த கருணை;

பரி மேல் அழகுடனே ஏறி வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவே வருவாயே

 

ஞான பரி: ஞானமே வடிவான மயிலாகிய வாகனம்;

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி

 

சதகோடி: நூறு கோடி; வெண் மடவார்: வெண்ணிற ஆடையை அணிந்த மாதர்கள்; சாமரை: சாமரம், கவரி; சசி: சந்திரன்;

சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா

 

சதி நாடகம்: தாள ஒத்தோடு கூடிய நாட்டியம்; வேணியன்: சடாமுடியை உடையவன்;

விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே

 

விதியானவன்: பிரமன் (உயிர்களின் விதியை விதிப்பவன்); விதியானவன் இளையாள்: பிரமனுடைய தங்கையான வள்ளி (விளக்கத்தில் காண்க);

வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே.

 

வெளி: ஆகாயம்; ஆசை: திசைகள்; அடை: நிறைந்துள்ள; பூவணர்: காயாம்பூ வண்ணனாகிய திருமால்; மணிமுதிர்: முதிர்ந்ததாகிய மணி; ஆடகம்: பொன்; வெயில்: ஒளி;

மதன் ஏவிய கணையால் இரு வினையால் ... மன்மதன் விடுத்த மலரம்புகளாலும்; நல்வினை, தீவினைகளாலும்;

புவி கடல் சாரமும் வடிவாய் உடல் ... நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்சபூதங்கள், கிரகங்கள் ஆகியவற்றின் இயக்கத்தாலும் வடிவெடுத்திருக்கிற (ஆட்பட்டிருக்கிற) இந்த உட(லைச் சுமந்தபடி),

நடமாடுக முடியாதேன் ... நடமாட இயலாதவனாகிய அடியேனுடைய,

மன மாயையோடு இரு காழ் வினை அற ... மனத்திலே இருப்பதான மாயையும்; நல்வினை தீவினை என்ற முற்றி முதிர்ந்ததான இரண்டுவினைகளும் அழியவும்;

மூதுடை மலம் வேர் அற ... தொன்றுதொட்டு பற்றிவருவதான ஆணவ மலமானது வேரோடு அற்றுப் போய் வீழவும்,

மகிழ் ஞானக அநுபூதியின் அருள் மேவி ... மகிழத்தக்கதும், உள்ளத்திலே விளங்குவதுமான அனுபவ ஞானம் என்னும் அருளை அடைந்து,

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக ... (உன்) பதத்தை அடைந்த அடியார்களோடு அடியேனும் கலந்து விளையாடும்படியாக,

அடியேன் மு(ன்)னெ பரிபூரண கிருபாகரம் உடன் ... என்னெதிரிலே முழுமையான கருணையோடு,

ஞானப்பரி மேல் அழகுடன் ஏறி ... ஞானமே வடிவெடுத்த குதிரையான (வாகனமான) மயிலின்மேல் அழகுற ஏறிக்கொண்டு,

வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட ... உன் திருவடிகளில் தேவர்கள் மலர்மாரி சொரிய,

பல கோடி வெண் மதி போலவெ வருவாயே ... பலகோடி சந்திரர்களின் குளிர்ச்சியான ஒளியை வீசிக்கொண்டு நீ வரவேண்டும்.

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா ... வெண்ணிற ஆடையை அணிந்த நூறுகோடிப் பெண்கள் வீசும் சாமரங்கள், கடலலைகளைப் போல வீச;

முழு சசி சூரியர் சுடராம் என ... முழு நிலவும் சூரியனும் தீபங்களாகச் சுடர்விட,

ஒரு கோடி சடை மா முடி முநிவோர் சரண் என ... சடாமுடியை உடைய கோடிக்கணக்கான முனிவர்கள் சரணம் என்று துதிக்க;

வேதியர் மறை ஓதுக ... வேதியர்கள் வேதங்களை ஓத;

சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா ... தாளத்துடன் சேர்ந்த நாட்டியத்தை ஆடுபவரும்; சடாமுடியை உடையவருமான நடராசருடைய பாலனே!

விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி ... உயிர்களின் விதியை நிர்ணயிப்பவனான பிரமனின் தங்கையும்*; என் உள்ளத்தில் வீற்றிருப்பவருமான வள்ளியம்மை,

(* பிரமன் திருமாலிடத்தில் தோன்றியதால் அவருடைய மகன்; திருமாலுடைய மகளான சுந்தரவல்லியே வள்ளியம்மை என்பதால், வள்ளியம்மை பிரமனுக்குத் தங்கையாகிறார்.)

வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே ... (அன்பினால்) பெரிதும் மயக்கமுறும்படியாக அவருடைய மார்கங்களைப் பொருந்த அணைத்த முருகா!

வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா ... ஆகாயத்திலும், எல்லாத் திசைகளிலும் நிறைந்திருப்பவரும்; காயாம்பூ நிறத்தவருமான திருமாலுக்கு மருகனே!

மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா ... செம்மை முதிர்ந்த ரத்தினங்களும் பொன்னும் கலந்த ஒளியை வீசுகின்ற அழகனே!

தமிழ் பெருமாளே. ... தமிழ்மொழியின் பெருமாளே!

சுருக்க உரை

வெண்ணிற ஆடையயை அணிந்த நூறுகோடிப் பெண்கள் விசுகின்ற வெண்சாமரமானது கடல் அலைகளைப்போல வீச; முழு நிலவும் சூரியனும் தீபங்களாக விளங்க; சடாமுடிய தாங்கிய முனிவர்கள் ‘சரணம் சரணம்’ என்று கோஷிக்க; தாள லயத்தோடு நடனமாடும் நடராசரின் பாலனே!  பிரமனுடைய தங்கையும்; என் உள்ளத்தில் நிறைந்தவளுமான வள்ளியம்மை அன்பின் மயக்கத்தை அடையும்படி அவளது மார்பகத்தைப் பொருந்த அணைத்தவனே!  ஆகாயத்திலும் எல்லாத் திசைகளிலும் நிறைந்த காயாம்பூ நிறத்தவரான திருமால் மருகனே!  சிவந்த ரத்தினம், பொன் இவற்றைப்போல் சுடர்விடும் ஒளியை உடைய அழகனே!  தமிழ்ப் பெருமாளே!

மன்மத பாணங்களுக்கும்; நல்வினை, தீவினை ஆகியவற்றுக்கும்; ஐம்பூதங்களுக்கும்; கிரகங்களின் இயக்கத்துக்கும் கட்டுப்பட்ட வடிவமான இந்த உடலைச் சுமந்தபடி நடமாட முடியாத அடியேனுடைய மனத்திலுள்ளதான மாயையையும்; நல்வினை தீவினை என்ற முற்றிய வினைகளையும்; பழைமையானதாகிய ஆணவ மலத்தையும் வேரறுத்து; மகிழத்தக்கதும் உள்ளத்தில் விளங்குவதுமான அனுபூதியை அடியேன் அடைந்து; உன் திருவடிகளைச் சேர்ந்த மற்ற அடியாயர்களோடு நானும் கலந்திருக்குமாறு செய்வதற்காக

ஞானமே வடிவெடுத்ததான வாகனமாகிய மயிலின்மேல் நீ ஏறிக்கொண்டு அடியேனுக்கு எதிரில் பலகோடி சந்திரர்களின் குளிர்ச்சியான ஒளியோடு எழுந்தருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.