பகுதி - 342
பிறவிப் பிணியற என்று பல பாடல்கள் வேண்டுகின்றன. இந்தத் திருத்தணித் திருப்புகழோ, பிணியான பிறவியில் ஏற்படும் பல வரிசைவரிசையான
பிறவிப் பிணியற என்று பல பாடல்கள் வேண்டுகின்றன. இந்தத் திருத்தணித் திருப்புகழோ, பிணியான பிறவியில் ஏற்படும் பல வரிசைவரிசையான நோய்களைப் பட்டியலிட்டு இத்தனை நோய்களும் எத்தனைப் பிறவியெடுத்தாலும் பாதிக்காதபடி இறையருளைக் கோருகிறது. ‘நோய்தீர்க்கும் திருமந்திரம்’ என்ற சிறப்பைப் பெற்ற இந்தப் பாடல் நித்திய பாராயணத்துக்குரியது என்று உரையாசிரியர் குகத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்.
பாடலின் அமைப்பு முறையில் ஒவ்வோரடிக்கும் ஒற்றொழித்து 22 எழுத்துகள்; தொங்கல் சீரை விட்டுவிட்டு, ஒற்று சேர்த்து ஒவ்வொரு 5, 11, 17 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில். அவ்வப்போது இடம்பெறும் இடையின ஒற்றுகளைத் தவிர்த்து, வல்லொற்றோ மெல்லொற்றோ அமையாத பாடல். நீரிழிவு—சர்க்கரை வியாதி, விடாத தலைவலி (hyper-tension உட்பட பல நோய்களின் அறிகுறி), கழுத்தைச் சுற்றி தைராய்டு பிரச்சினையால் ஏற்படும் goiter முதலான பலவகையான நோய்களிலிருந்து பாதுகாப்பும் குணமும் பெற முருகனைத் துதிக்க ஏற்ற பாடல். மனப்பாடமாகவே செய்து பாராயணம் செய்வது நல்லது.
தனதன தான தனதன தான
Advertisement
தனதன தான தனதான
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.