பகுதி - 344
திருத்தணித் தலத்துக்கான இப்பாடலிலும் பலநோய்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.
திருத்தணித் தலத்துக்கான இப்பாடலிலும் பலநோய்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. ‘இருமலு ரோக முயலகன் வாத’ பாடலில் நோய் நீக்கமே முதன்மை பெறுகிறது. இப்பாடலில் ‘இத்தனை நோய்களால் நான் வருந்தி அழியாமல்’ காக்க வேண்டும் என்று கோரினாலும் இது முக்தி பெறுவதை முதன்மையாகக் கோரும் பாடல்.
அடிக்கு 28 எழுத்துகள்; தொங்கல் சீரில் மட்டும் நெடிலெழுத்து இடம்பெறுகிறது. மற்ற அனைத்தும் குறில். ஒற்று உட்பட 5, 13, 21 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று; 8, 16, 24 ஆகிய எழுத்துகள் வல்லொற்று. பாடலைப் பார்ப்போம்.
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த தனதான
எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட பெருமாளே.