பகுதி - 346
திருப்புகழ் சந்தத்தின் சிக்கலான அமைப்புகளில் ஒன்று இது
திருச்சிராப்பள்ளி, திரிசிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருச்சி என்றெல்லாம் அறியப்படும் தலத்துக்கான பாடல் இது. ஈடேறும் வழியைக் காணாமல் அலைந்து திரியாமல் அடியேனைக் காத்தருளவேண்டும் என்று கோரும் பாடல்.
சந்த அமைப்பில் சற்று வேகமான நடையையுடையது. ஒற்றொழித்து அடிக்கு 24 எழுத்துகள்; மடக்கடியின் 13ம் எழுத்து தொடங்கி, (தொங்கல்சீர் நீங்கலாக) அனைத்து எழுத்துகளும் நெடில்; ஒற்று சேர்த்து 5, 12 ஆகிய எழுத்துகள் வல்லொற்று (‘வாய்க்கனி’ என்பதை ஒத்தய சீர்களில் இடையின ஒற்று கணக்கிலில்லை); முதல் சீரும் மூன்றாம் சீரும் எதுகையமைப்பு; மடக்கடியின் அனைத்து சீர்களின் பெரும்பான்மையும் எதுகையமைப்பை உடையவை. திருப்புகழ் சந்தத்தின் சிக்கலான அமைப்புகளில் ஒன்று இது. பாடிக் கேட்டாலும், செய்யுளாகச் சொல்லிக் கேட்டாலும் வேகமான நடையை உணரவைத்து மயக்கும் பாடல்.
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா தனதானா
Advertisement
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே அழகான
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே யுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ கையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா உமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர் பெருமாளே.