பகுதி - 347
மலைநாட்டுக்குத் தலைவனே! வயலூரின் தலைவனே! இறப்பும் மூப்பும் அற்றவனே!
பதச் சேதம் | சொற் பொருள் |
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான Advertisement
| குமுதவாய்: ஆம்பல் மலரைப் போன்ற; கோல்: அம்பு; சேல்: மீன்; |
குழைகள் தாக்கிய விழிகளால் களி கூரா வீறா தீரா மாலா அவரோடே
| குழைகள்: காதணிகள்; (காதளவோடிய கண்கள் என்பதால் குழைகள் தாக்கிய விழி; களிகூரா: களி கூர்ந்து, மிகுந்து; வீறா: வீறுடன், பெருமையுடன்; தீரா: தீராத, முடிவற்ற; மாலா: மால்ஆ(கி), மோகமுற்று; |
உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று
| ஓரீர்: ஓர மாட்டீர்கள், நினைத்துப் பார்க்க மாட்டீர்க்ள; |
உடை தொடா பணம் இடை பொறா தனம் ஊடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ
| உடைதொடா: உடயைத் தொட்டு; பணம்: பாம்பின் படம் (போன்ற இடை); இடை பொறா தனம்: இடையாலே தாங்க முடியாத மார்பு; |
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி
| தமர(ம்): ஓசை; தமர வாக்கியம்: பேரோசையுடன் எழும் கோஷம்; தாதா: வள்ளல்; ஞாதா: ஞானி; தோகையில்ஏறி: மயிலில் ஏறுபவனே; |
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே
| சயில நாட்டு: மலை நாட்டு; வயலி நாட்டு: வயலூருக்கு; இறை: தலைவா; மூவாமே: மூத்தல் இல்லாத; |
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா
| திமிர(ம்): இருள்; திமிர ராக்கதர்: இருட்டைப் போல கரிய அரக்கர்கள்; நேரா: நேரான, நீதி நிறைந்தவனே; தோரா: (தோலாதவனே) தோற்காதவனே; |
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே.
|
|
குமுத வாய்க் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான குழைகள் தாக்கிய விழிகளால் ... செவ்வாம்பல் மலரைப் போன்ற வாயும்; கனிகளைப் போன்ற இனிக்கும்ம சொற்களும்; அம்போ, வேலோ, மீனோ என்னும்படியானவையும்; (காதளவு ஓடியிருப்பதால்) காதின் குழைகள் மேலே படுவதுமான நீண்ட கண்களால்,
களி கூரா வீறா தீரா மாலாய் அவரோடே உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று ... (நான்) மிக்க மகிழ்ச்சியடைந்து, பெருமையுடனும்; முடிவற்றதாகிய மோகத்துடனும் (அவர்களிடம்), ‘உங்களுடைய தோள்களின்மேல் எமக்கு உள்ள ஆசைய நினையுங்கள்; பாருங்கள்; வாருங்கள்; வந்து எம்மைச் சேருங்கள்’ என்றெல்லாம் கூறியபடி;
உடை தொடாப் பணம் இடை பொறாத் தனம் ஊடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ ... (அவர்களுடைய) ஆடையைத் தொட்டும்; பாம்பின் படம்போன்ற இடையின் பக்கங்களிலும், இடையால் தாங்க முடியாத பாரத்தை உடையதான மார்பகங்களிலும் விழுந்து ஈடேறாமல் உழன்றுகொண்டிருப்பேனா?
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி... பேரோசையுடன் கூடிய துதிச்சொற்களால் தேவர்கள் வாழ்த்துகின்ற வள்ளலே! ஞானவானே! மயிலில் ஏறி வருபவனே!
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவாமே வா நீ வா இளையோனே ... மலைநாட்டுக்குத் தலைவனே! வயலூரின் தலைவனே! இறப்பும் மூப்பும் அற்றவனே! என்றும் இளையவனே நீ வரவேண்டும் வரவேண்டும்;
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா ... இருட்டைப் போல கரிய அசுரர்களோடு போரிடுவதற்கான வேலைக் கரத்தில் ஏந்திய தீரனே! வீரனே! நீதிமானே! தோல்வியற்றவனே! உமையம்மையின் பாலனே!
திரிசிராப்ப(ள்)ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே. ... திரிசிராப்பள்ளி மலையின் மேல் வீற்றிருக்கும் தேவனே! வேந்தனே! முருகவேளே! விண்ணோர் பெருமாளே!
சுருக்க உரை
பேரோசையுடன் கூடிய துதிச் சொற்களோடு தேவர்கள் வாழ்த்துகின்ற வள்ளலே! ஞானியே! மயில்வாகனனே! மலைநாடுகளின் தலைவனே! வயலூரின் தலைவனே! இறத்தலும் மூத்தலும் இல்லாதவனே! என்றும் இளையோனே! (எமக்கு அருள்வதற்காக) நீ வரவேண்டும் வரவேண்டும். வருகவருக.
செவ்வாம்பல் போன்ற இதழ்களும்; இனிமையான சொற்களும்; அம்போ, வேலோ மீனோ என்னும்படியானவையும்; காதிலுள்ள குண்டலங்கள் மோதுகின்ற ஓரங்களை உடையனவும் ஆகிய கண்களை உடைய மகளிரிடத்திலே, ‘உம்முடைய தோள்களின்மேல் எமக்குள்ள ஆசையை நீங்கள் நினைத்துப் பார்த்து எம்மிடத்தில் வந்து எம்மைச் சேர்க’ என்றெல்லாம் பிதற்றியபடி,, அவர்களுடை ஆடையைத் தொட்டும்; பாம்பின் படம்போன்ற இடையிலும்; இடையால் தாங்கமுடியாத பாரத்தை உடைய தனங்களிலும் வீழ்கின்ற நான் ஈடேறும் வழியைக் காணாமலே திரிந்துகொண்டிருப்பேனோ. (இவ்வாறு திரியாமல் ஈடேறும் வழியைக் காட்டியருள வேண்டும்.)