பகுதி - 637
சூழ்ந்துள்ள தீவினைகள்
பதச் சேதம் | சொற் பொருள் |
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம் Advertisement
| வினைக்கண்: வினையின் காரணமாக; கழி: அளவற்ற; |
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே
| சோரம்: களவு; துணை யாதே: எது துணை, யார் துணை |
ஏழையென் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
| ஏழையென்: ஏழையேன் (குறுக்கல் விகாரம்); |
ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே
| ஏதம்: குற்றம்; |
ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே
| எழு நாளே: ஏழு நாளில்; |
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே
| ஆண்மை செலுத்தி: ஆண்மையை (வீரத்தைக்) கொண்டு; கரும்புயல்: ராமன், திருமால்; |
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே
|
|
வேத வனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே.
| வேதவனம்: வேதாரணியம்; |
சூழும்வினைக் கட்டுன்ப நெடும்பிணி கழிகாமஞ்... (என்னைச்) சூழ்ந்துள்ள தீவினைகளின் காரணமாக வருகின்ற பெரிய நோய்களும் அளவுகடந்த காமமும்;
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறுதுணை யாதே... களவும் ஆகிய இவற்றையே மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பேன் என்றால் எனக்கு யார்தான் உற்ற துணைவராக முடியும்?
ஏழையென் இத்துக்கங்களுடன் தினம் உழல்வேனோ... ஏழையேனான அடியேன் இத்தகைய துக்கங்களோடே தினமும் அல்லலுற வேண்டுமோ? (அல்லலுறாது காத்தருள வேண்டும்.)
ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே... இத்தகைய குற்றங்களை நீக்கி, (நான்) உன்னுடைய சிவந்த பாதங்களைச் சிந்திக்கும்படியாகச் செய்யவேண்டும்.
ஆழியடைத்துத் தன்கை இலங்கையை எழுநாளே…... கடலை அணைகட்டி அடைத்து ஏழே நாளில் இலங்கையைத் தன்வசப்படும்படியாக,
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் மருகோனே... தன் வீரத்தைக் காட்டி வெற்றிகொண்ட கரிய மேகத்தை ஒத்த ராமனுடைய மருகனே!
வேழமுகற்கு தம்பியெனுந் திரு முருகோனே... யானைமுகத்து விநாயகனுடைய தம்பியாக விளங்குகின்ற திருமுருகனே!
வேதவனத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.... வேதாரணியத்தில் வீற்றிருக்கின்ற சங்கரனார் தந்தருளும் பெருமாளே!
சுருக்க உரை:
கடலை அணைகட்டி அடைத்துத் தன் வீரத்தினால் ஏழே நாளில் தன்வசப்படுத்திய கருமேகத்தை ஒத்த இராமனுடைய (திருமாலுடைய) மருகனே! யானை முகத்து கணபதியின் தம்பியாக விளங்குகின்ற திருமுருகனே!
அடியேனைச் சூழ்ந்துள்ள வினைகளின் காரணமாக வருகின்ற துன்பம், பெரிய நோய்கள், அளவுகடந்த காமம், திருட்டு என்று இவற்றையே நான் நினைத்துக் கொண்டிருந்தால் (இந்த வழியிலேயே சென்றுகொண்டிருந்தால்), எனக்கு உற்ற துணைவராக எதுதான் (அல்லது யார்தான்) இருக்கமுடியும்? ஏழையேன் இத்தகைய துன்பங்களோடு தினமும் உழன்றுகொண்டிருப்பேனோ? (அவ்வாறு உழலாதபடி ஆண்டுகொண்டு அருளவேண்டும்.)