பகுதி - 646
திருவடியைத் தந்தருளவேண்டும்
பற்பல சமயத்தவரும் தமக்குள்ளே வாதிட்டு மோதிக் கலகமிட்டும் அறிய முடியாததாகிய பொருளை உபதேசித்தருளி, ஞான தரிசனத்தைக் கொடுத்து உன்னுடைய திருவடியைத் தந்தருளவேண்டும் என்று கேட்கின்ற இந்தப் பாடல் பழநி மலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் ஒரு வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் பயில்கின்றன.
தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான தனதான
Advertisement
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்ப ரக்க ணாதர் உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான வுபதேசந்
தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ தொருநாளே
கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய முகவீரர்
குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை விடுவோனே
பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே.