பகுதி - 659
ஐராவதம் வளர்த்த பூங்கொம்பைப் போன்ற
பதச் சேதம் | சொற் பொருள் |
சந்ததம் பந்த தொடராலே Advertisement
| சந்ததம்: எப்போதும்; பந்தத் தொடர்: பாசத் தொடர்பு; |
சஞ்சலம் துஞ்சி திரியாதே
| துஞ்சி: சோர்வடைந்து |
கந்தன் என்று என்றுஉற்று உனை நாளும்
| கந்தன் என்று என்று உற்று: கந்தா என்று அடிக்கடிச் சொல்லி உன்னை மனத்தில் பொருத்தி; |
கண்டு கொண்டு அன்புஉற்றிடுவேனோ
| கண்டுகொண்டு: (மனக்கண்ணால்) பார்த்து; |
தந்தியின் கொம்பைபுணர்வோனே
| தந்தியின்: யானையின் (ஐராவதத்தின்); கொம்பை: பூங்கொம்பு போன்ற—தேவானையை; |
சங்கரன் பங்கில் சிவைபாலா
|
|
செந்தில் அம் கண்டி கதிர்வேலா
|
|
தென் பரங்குன்றில்பெருமாளே.
|
|
சந்ததம் பந்தத் தொடராலே... பந்த பாசங்களின் தொடர்பினால் எப்போதும்;
சஞ்சலந் துஞ்சித் திரியாதே...வருத்தமுற்று, சோர்வடைந்து திரியாமல்;
கந்தனென்று என்று உற்று உனைநாளும்... ‘கந்தா’ என்று உன்னை எப்போதும் அழைத்து;
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ... மனக்கண்ணால் உன்னை தரிசித்து அன்பு கொள்வேனோ? (அன்புகொள்ளுமாறு அருள வேண்டும்.)
தந்தியின் கொம்பை புணர்வோனே... ஐராவதமாகிய யானை வளர்த்த பூங்கொம்பைப் போன்ற தேவானையைச் சேர்பவனே!
சங்கரன் பங்கிற் சிவைபாலா... சங்கரனுடைய இடதுபாகத்தில் அமர்ந்திருக்கும் உமாதேவியின் பாலனே!
செந்திலங் கண்டிக் கதிர்வேலா... திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிபொருந்திய வேலோடு வீற்றிருப்பவனே!
தென்பரங் குன்றிற் பெருமாளே.... அழகிய திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளே!
சுருக்க உரை:
ஐராவதம் வளர்த்த பூங்கொம்பைப் போன்ற தேவானையைச் சேர்பவனே! சங்கரனுடைய இடதுபாகத்தில் வீற்றிருக்கும் உமாதேவியின் பாலனே! திருச்செந்திலிலும் அழகிய கண்டியிலும் ஒளிபொருந்திய வேலை ஏந்தியபடி வீற்றிருப்பவனே! அழகிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
பாசத் தொடரால் எப்போதும் வருந்தி சோர்வடைந்து திரியாமல்; எப்போதும் உன்னைக் ‘கந்தா’ என்று அழைத்து மனத்திலே பொருத்தி, உன்னை மனக்கண்ணால் தரிசித்து அன்புகொள்ளுமாறு அடியேனுக்கு அருள வேண்டும்.