முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 755

ஒரே குறிக்கோளோடு வாழவும்

Updated On : 13 பிப்ரவரி, 2018 at 10:54 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:44 PM

பதச் சேதம்

சொற் பொருள்

வாள் பட சேனை படஓட்டி ஒட்டாரைஇறுமாப்பு உடைதாள் அரசர் பெருவாழ்வும்

Advertisement

 

வாள்பட: வாள்வீச்சு படுவதால்; சேனைபட: சேனைகள் அழிய; ஒட்டாரை: பகைவர்களை; தாள் அரசர்: முயற்சியை உடைய அரசர் (தாள்: முயற்சி);

மாத்திரை போதில்இடு காட்டினில் போம்என இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர்போல

 

 

கோள் பட பாத மலர்பார்த்து இளைப்பு ஆறவினை கோத்த மெய்கோலமுடன் வெகுரூப

 

கோள்பட: (ஒரு) கோட்பாட்டை மேற்கொள்ள; வினைகோத்த மெய்: வினையாலே கோக்கப்பட்டுள்ள உடல்;

கோப்பு உடைத்தாகிஅலமாப்பினில் பாரிவரும் கூத்தினைபூரை இடஅமையாதோ

 

கோப்பு உடைத்தாகி: அமைப்பைக் கொண்டதாக; அலமாப்பினில்: துன்பங்களில்; பாரிவரும்: வளர்ந்து வரும்; பூரையிட: பூர்த்தியாக, முடிவுபெற;

தாள் பட கோப விஷபாப்பினில் பாலன்மிசை சாய்தொடுப்பாரவு நிள்கழல் தாவி

 

பாப்பினில்: பாம்பைப் போல; பாலன் மிசை: மார்கண்டேயனிடத்தில்; சாய்: குறியாக; தொடுப்பாரவு: தொடர்வது அதிகரிக்கவும்; நிள் கழல்: நீளும் கழல் (நீள் என்பது நிள் எனக் குறுகியது);

சாற்றும் அக் கோரஉரு கூற்றுஉதைத்தார் மவுலி தாழ்க்க வஜ்ரஆயுதனும்இமையோரும்

 

மவுலி தாழ்க்க: சடா மகுடத்தைத் தாழ்த்த (பணிய); வஜ்ராயுதனும்: இந்திரனும்;

ஆட்பட சாமபரமேட்டியை காவல்இடும் ஆய்க்குடிகாவல உததி மீதே

 

சாம: பொன்னிறமுடைய; பரமேட்டியை: பிரமனை; காவலிடும்: சிறையடைக்கும்; உததி: கடல்;

ஆர்க்கும் அதானவரை வேல்கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல்லபெருமாளே.

 

ஆர்க்கும்: ஆரவாரிக்கும்; தானவரை: அரக்கர்களை; வரையை: மலையை, கிரெளஞ்ச மலையை; ஆர்ப்பு: பேரொலி;

வாட்படச் சேனைபட ஓட்டி ஒட்டாரை இறுமாப்புடைத்து ஆள் அரசர் பெருவாழ்வும்...  வீசப்படும் வாள் படுகின்ற காரணத்தால் சேனைகள் எல்லாமும் அழியும்படியாகப் பகைவரை விரட்டுகின்ற செருக்கோடு ஆட்சி செய்கின்ற மன்னர்களுடைய பெருவாழ்வும்,

மாத்திரைப் போதில் இடு காட்டினிற் போமென இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர்போல... கண்ணிமைக்கும் பொழுதிலே சுடுகாட்டில் அழிந்துபோய்விடும் என்பதை உணர்ந்து இல்லறத்தைவிட்டுக் கரையேறுகின்ற உன்னுடைய அடியவர்களைப் போல,

கோட்படப் பாதமலர் பார்த்து இளைப்பாற ... ஒரே குறிக்கோளோடு வாழவும்; உன்னுடைய திருவடி மலரைக் கண்டு நான் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும்;

வினை கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்புடைத் தாகி...வினையால் கோக்கப்பட்ட வடிவத்தை உடைய இந்த உடலுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்து,

அலமாப்பினிற் பாரிவரு கூத்து இனிப் பூரையிட அமையாதோ... துன்பங்களிலே சிக்குண்டு, பெருகிவருகின்ற இந்தக் கூத்து இனியேனும் முடிவுபெறாதோ? (இனியேனும் முடிவுபெற வேண்டும்.)

தாட்படக் கோபவிஷ பாப்பினில் பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவு நிள் கழல்தாவி .... கால்பட்டால் கோபத்தோடு சீறி எழுகின்ற பாம்பைப்போல சிறுவனான மார்க்கண்டேயனை யமன் குறிவைத்துத் தொடரவும் தமது திருவடியை நீட்டி,

சாற்றும் அக் கோரவுரு கூற்று உதைத்தார் மவுலி தாழ்க்க வஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட...சொன்ன அந்த யமைனுடைய கோர உருவத்தை உதைத்தவரான சிவனார் (உன்னிடம் பிரணவப் பொருளை அறிவதற்காக) தம் சடாமகுடத்தைத் தாழ்த்தி நிற்க; வஜ்ராயுதத்தைக் கொண்ட இந்திரனும் தேவர்களும் உனக்கு ஆட்பட;

சாமபர மேட்டியைக் காவலிடும் ஆய்க்குடிக் காவல உததிமீதே ஆர்க்கும் அத் தானவரை...  பொன்னிறமான பிரமனைச் சிறையிலிட்டவனே! ஆய்க்குடியின் அரசனே!  கடலிலே பேரொலி எழுப்பிய அந்த அசுரர்களை(யும்),

வேற் கரத் தால்வரையை ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே...கிரெளஞ்ச மலையையும் பேரொலி உண்டாகும்படி திருக்கரத்திலுள்ள வேலைக் கொண்டு அழிக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

கால்பட்டதுமே சீறி எழுகின்ற் பாம்பைப் போல சிறுவனான மார்க்கண்டேயனைக் குறிவைத்துத் தொடர்ந்து வந்த யமனைத் தன் திருவடியை நீட்டி உதைத்த ஈசனாரும் உன்னிடத்தில் பிரணவப்பொருளை அறிவதற்காக தமது சடாமகுடத்தைத் தாழ்த்தி நிற்க; இந்திரனும் தேவர்களும் உனக்கு ஆட்பட; பொன்னிறமான பிரமனைச் சிறையிலிட்டவனே!  ஆய்க்குடியின் தலைவனே! கடலிலே ஆர்த்து நின்ற அசுரர்களையும் கிரெளஞ்ச மலையையும் திருக்கரத்திலுள்ள வேலைக் கொண்டு பேரொலி எழுமாறு வீழ்த்திய பெருமாளே!

வாள் வீசப்படுவதால் சேனைகள் அழிந்து போகும்படியாக ஓட்டவல்ல, இறுமாப்பு நிறைந்த அரசர்களுடைய பெரிய வாழ்வுகூட நொடிப்போதில் சுடுகாட்டில் முடிவடையும் என்பதை உணர்ந்து இல்லறத்திலிருந்து கரையேறும் உனத அடியார்களைப் போல ஒரே குறிக்கோளைக்கொண்ட வாழ்க்கையை மேற்கொள்ளவும்; உனது திருவடிகளைக் கண்டு இளைப்பாறவும்; வினையால் கோத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த உடலைப் பலவிதமாக அலங்கரித்துத் துன்பங்களே பெருகிவருகின்ற இந்த ஆட்டம் முடிவு பெறாதோ? (அடியேனை பிறவிப்பிணியாகிய இந்த ஆட்டத்திலிருந்து விடுவித்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.