முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: பெருவை பார்த்தசாரதி

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

பெண்களென்றாலே பிதற்று கின்ற இவ்வுலகில்
    பெண்மீது எனக்குள்ளொரு கொள்கை யுண்டு..!
கண்களால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத
    கண்ணியம் கடமையோடு கட்டுப்பாடு முண்டு..!
வண்ணமலர் வாசனை யோடொருத்தி ஒருநாள்
    வளையவந்து வசமாய் மனத்துளே புகுந்தாள்..!
கெண்டை விழியாலவள் கண்சிமிட்டினாள்..நான்
    கொண்ட கொள்கையுமன்றே காற்றில் பறந்தது..!

விண்மீனுமவள் கண் முன் தோன்றினாலதன்
    விழிமூடி வெளிச்சம் தருவதையும் மறந்துவிடும்..!
கண்ணாடி முன்னவள் முகம்பார்க்கையில் தான்
    கண்டவழகை கண்ணாடியும் கவிதை யாக்கிடும்..!
கொண்டையிலே வீற்றிருக்கும் தாழம்பூ... தான்
    கொண்ட பெருமிதத்தால் மணம்வீச மறக்கும்..!
கண்சிமிட்டி கருவிழிப் புருவமுயர்த்து மழகால்
     கட்டான காளையருமவள் காலடியில் வீழ்வார்..!

சும்மாயவளைப் பார்த்தாலே சிந்தனை பிறக்கும்
    சொற்களெலாம் ஒன்றுகூடி கவிதைகள் ஆகும்..!
எம்மாடி? எவ்வளவு அழகென வியக்கும்போது
    எழுத்துக்கள் எல்லாம் காவியமாகக் கைகூடும்..!
செம்மாதுளை பிளந்த சிவப்புதடைக் காட்டிச்
    சிரித்து விட்டாலது சிறந்த காதலோவியமாகும்..!
அம்சமான அழகுக்கவள் அற்புத படைப்பாக
    அந்தப் பிரம்மனுமே பெருமூச்சு விடக்கூடும்..*

கண்மூடி அவள் தியானத்தில் இருந்தால்
    காதலர் களுக்குக் கனவினைக் கொடுப்பாள்..!
கண்விழித்து அவள் சற்றேயுற்று நோக்கின்
    காமன் விடும் பாணமும் எதிர்கொள்ளாது..!
கண்ணின் கருவிழியை உருட்டும் போது
    கனியும் கன்னக் குழியாலவள் அழகுகூடும்..!
கண்சிமிட்டிக் காதல் வலை வீசினாலோ
    கலையோவியம் கூட உயிர் பெற்றெழுமாம்..!

முழு கட்டுரையைப் படிக்க →