என்றும் என் இதயத்தில்: சா. கா. பாரதி ராஜா
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM
நீயும் நானும்
எதிரெதிர் துருவம் தான்!
நீ செல்ல செல்ல
பின் தொடர்கிறேன் நான்!
செதில் செதிலாய்
உடைத்தாலும்
அனைத்திலும் பிரியாமல்
நீயும் நானும்!
பிறர் உடைக்கும்போது
இரு துருவங்களாகிய நமக்குள்
அதிகமாகிக்கொண்டே போகிறது
நெருக்கம்!
Advertisement
நமக்குள் என்றும்
ஈர்ப்பு விசை!
நாம் மட்டும் உணரும்
காதல் விசை!
முகங்காணா நாமிருவரும்
கட்டிய காதல்கோட்டை
காந்த புலம்!
பரிமாறிக் கொண்ட
முத்தங்களாய்
சிதறிக் கிடக்கும்
இரும்புத் துகள்கள்!
இரும்பு நெஞ்சங்களும்
காதலர்களாய் மாறுகின்றன
காதல் மின்சாரம்
பாய்ந்ததாலோ!
இங்கே
காதல் பண்பை
இழந்து விடுபவர்கள்
திடீர் காதலர்கள்!
இறுதிவரை
காதலை இழக்காமல்
வாழ்கிறார்கள்
இயற்கைக் காதலர்கள்!
பூமியின் அதிசயமாய்
இருக்கும் நாம்...
உணர்த்துகிறோம்
காதல் அழிவதில்லையென்று!
காந்தப் புலத்தில்
இரு காதல் துருவங்களாய்
என்றும் காதல் புரிவோம்!
என்றும் நீ
என் இதயத்தில்!