29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 8
அரும்பினுள்ளே நறுமணம் வீசும் மகரந்தத்தை வைத்தவர் சிவபெருமான்; தீய வார்த்தைகள் பேசுவதைத் தவிர்ப்பதற்காக திருமுறை போன்ற நல்ல நூல்களைப் பயிலும் வழியினை வைத்தவர் சிவபெருமான்;
பாடல் 8
கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பரும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கொங்கு = வாசனை மகரந்தம். கங்குல் பகல் = துன்பம் மற்றும் இன்பம். சங்கினுள் முத்தம் = பாசப் பிணைப்பினை அறுத்தால் கிடைக்கும் வீடுபேறு இன்பம். கூற்றங்கள் = தீய வார்த்தைகள். கூற்றங்கள் என்பதற்கு, நமது உயிருக்கு ஏற்படும் ஆபத்துகள் என்று பொருள் கொண்டு, அத்தகைய ஆபத்துகள் நம்மை கெடுக்காத வண்ணம் அந்த ஆபத்துகளை கெடுத்தவர் என்றும் பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. மணிவாசகர் திருவாசகம் திருவண்டப் பகுதி, உயிருக்கு ஏற்படும் அத்தகைய ஆபத்துகளை பட்டியல் இடுவதை நாம் காணலாம். கருவிலிருக்கும் பத்து மாதங்களில் பத்து விதமான ஆபத்துகளில் இருந்து தப்பிக்கும் உயிர், பிறந்த பின்னர், பொருளை ஈட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள், ஈட்டிய பொருளைப் பாதுகாப்பதில் ஏற்படும் ஆபத்துகள், பொருளை ஈட்டுவதற்காக செய்யும் வேலையில் ஆபத்துகள், காலையில் மலத்தாலும், பகலில் பசியாலும், இரவில் நித்திரையாலும், இவைகளினிடையே மேற்கொள்ளும் பயணத்தாலும் ஏற்படும் ஆபத்துகள், பெண்களின் கடைக்கண் பார்வையால் ஏற்படும் ஆபத்துகள், ஆசையினால் ஏற்படும் ஆபத்துகள், கல்வி, செல்வம் மற்றும் வறுமை உண்டாக்கும் ஆபத்துகள் என்று பல விதமான ஆபத்துகள் இந்த அகவலில் குறிப்பிடப்படுகின்றன.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">அரும்பினுள்ளே நறுமணம் வீசும் மகரந்தத்தை வைத்தவர் சிவபெருமான்; தீய வார்த்தைகள் பேசுவதைத் தவிர்ப்பதற்காக திருமுறை போன்ற நல்ல நூல்களைப் பயிலும் வழியினை வைத்தவர் சிவபெருமான்; சங்கினை அறுத்து முத்து எடுப்பது போன்று நமது பாசப் பிணைப்புகளை அறுத்தால் நமக்கு கிடைக்கும் வீடுபேறு எனும் ஒப்பற்ற செல்வத்தை வைத்தவர் சிவபெருமான்; திருநீற்றினை அனைவரும் பூசி பயனடைய வைத்தவர் சிவபெருமான்; மெய்ப்பொருளை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காக வேதங்களையும் அதன் அங்கங்களையும் வைத்தவர் சிவபெருமான்; உலகத்தவர்களையும் தேவர்களையும் காக்கும் பொருட்டு, ஆலகால விடத்தை உண்டுத் தனது கழுத்திலே அடக்கியவர் சிவபெருமான்; மாறி மாறி வரும் இரவும் பகலும் போன்று, இன்பங்களையும் துன்பங்களையும் வைத்து நமது வினைகளைக் கழித்துக்கொள்ளும் வகையும் வைத்தவர் சிவபெருமான்; இவ்வாறு பல வகையிலும் அருள் புரியும் பெருமான், கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார்.</p>
Advertisement