31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 5
விருப்பத்துடன் பெருமானை வழிபாட்டு நிற்கும் தேவர்கள், எங்களது உலகமாக இருப்பவனே, வேதங்களாகவும் கீதங்களாகவும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பவனே, எண்ணானாவனே,
பாடல் 5
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய்
விரவி எங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடல் ஏழானாய் இறையானாய் எம்
இறையே என்று நிற்கும்
கண்ணானாய் காரானாய் பாருமானாய் கழிப்பாலை உள்ளுறையும்
கபாலப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே
போதும் நாமே
<strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இறை = எல்லாப் பொருட்களுக்கும் தலைவன். கார் = மேகம். விண் = தேவர்கள் உலகம். கண் = பற்றுக்கோடு.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">விருப்பத்துடன் பெருமானை வழிபாட்டு நிற்கும் தேவர்கள், எங்களது உலகமாக இருப்பவனே, வேதங்களாகவும் கீதங்களாகவும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பவனே, எண்ணானாவனே, எழுத்தானவனே, ஏழு கடல்களாக உள்ளவனே, எங்களுக்குத் தலைவனாக இருப்பவனே, எங்களுக்கு பற்றுக்கோடாக உள்ளவனே, மழை பொழியும் மேகம் போன்று கருணை உள்ளம் கொண்டவனே, எல்லா உலகங்களாக இருப்பவனே என்று சிவபெருமானை வாழ்த்துகின்றார்கள். இவ்வாறு வாழ்த்தப்படும் பெருமான் கழிப்பாலைத் தலத்தில் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய பெருமானாகிய அவர், மண்ணோடு மண்ணாக கலந்து அழியக்கூடிய நிலையில்லாத உடலினில் சிக்காமல் பிறப்பிறப்பு என்ற சங்கிலியிலிருந்து விடுபட்டு முக்தி உலகத்திற்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.</p>
Advertisement