28. வனபவள வாய் திறந்து - பாடல் 10
எவராலும் வெல்லமுடியாத வல்லமை படைத்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் இடுக்குண்டு
பாடல் 10
அடர்ப்பரிய இராவணனை அருவரைக் கீழ் அடர்த்தவனே என்கின்றாளால்
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால்
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">அடர்த்தல் = வெல்லுதல். கருவி = தொகுதி. கடற்கருவி = கடலின் பகுதியாகிய உப்பங்கழிகள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">எவராலும் வெல்லமுடியாத வல்லமை படைத்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் இடுக்குண்டு நசுங்கும் நிலைக்குத் தள்ளியவனே என்றும், சுடர்விட்டு பிரகாசிக்கும் பெரிய திருமேனியைக் கொண்டவனே என்றும், திருமேனியில் வெண்ணீறு பூசியவனே என்றும், பெரிய இலைகளைக் கொண்ட கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவனே என்றும் எனது மகள் இடைவிடாது மொழிகின்றாள். கடலின் பகுதியாகிய உப்பங்கழிகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.</p><p align="JUSTIFY"><strong>முடிவுரை</strong></p><p align="JUSTIFY">தனது மகள் இடைவிடாது கூறிய சொற்களைக் கேட்ட தாய், தனது மகள் சிவபிரான் பேரில் தீராத காதல் கொண்டிருப்பதை உணர்கின்றாள். அறியா வயது சிறுமி என்பதால், தனது மகளுக்கு, தான் கொண்டுள்ள காதல் நிறைவேறுமா அல்லவா என்பது புரியாத நிலையில், பித்துப் பிடித்தவள்போல் எப்போதும் சிவபிரானின் பெருமையையும் அவனது புகழ்ச் செயல்களையும், அவனது அடையாளங்களையும் பிதற்றிக்கொண்டு இருக்கும் மகளின் நிலையை எண்ணி, அவள் மீது இரக்கம் கொண்டு, தனது மகள் பற்றி தான் கொண்டுள்ள கவலையை உணர்த்தும் அருமையான பாடல்கள் கொண்ட பதிகம்.</p><p align="JUSTIFY">அகத்துறைப் பாடலாக சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ள ஒரு பெண்ணின் செய்கைகளைச் சித்தரிக்கும் பதிகமாக இருந்தாலும், இந்த பதிகத்தின் மீது நமக்கு உணர்த்தப்படும் கருத்து யாதெனின், இவ்வாறு சிவபிரானின் நாமத்தையும் புகழினையும் இடைவிடாது சொல்லிக்கொண்டு இருந்தால், நமக்கு இறைவனின் அருள் கிடைக்கும் என்பதாகும். நாம் சிவபிரானின் திருநாமத்தை இடைவிடாது பிதற்றிக்கொண்டு, கண்களிலிருந்து நீர் பொழியுமாறு, அவனை வாயால் வாழ்த்தி, மனத்தினால் நினைத்து, பல காலமும் அவனது உருவத்தைத் தியானிக்க வேண்டும் என்று கூறும் மணிவாசகரின் பாடல் நமக்கு நினைவுக்கு வருகின்றது (கோயில் திருப்பதிகம், கடைப் பாடல்).</p><p align="JUSTIFY">நல்காது ஒழியான் நமக்கு என்று நாமம் பிதற்றி நயன நீர்<br />மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி<br />பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே<br />ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே</p><p align="JUSTIFY"> </p>
Advertisement