29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 3
வாமனை வணங்க வைத்தார் என்று கூறுவது நமக்கு பிருங்கி முனிவரின் வரலாற்றினை நினைவூட்டுகின்றது. பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர்.
பாடல் 3
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனை சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
<strong><br /><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வாமன் = வாமனனாய் வந்த திருமால் என்று ஒரு சாரார் பொருள் கொள்வார்கள். வாமம் என்பதற்கு இடது பாகம் என்று பொருள். இடது பாகத்தில் சக்தியை வைத்தவன் என்ற பொருளும், இறைவனின் இடது பாகத்தில் அமைந்துள்ள சக்தி என்றும் இரண்டு விதமாகவும் பொருள் கொள்வார்கள். எனவே வாமனை வணங்க வைத்தார் என்பதற்கு, தனது இடது பாகத்தில் உள்ள உமையம்மையை, அனைவரும் வணங்கச் செய்பவர் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. மேலும் நமச்சிவாய என்ற மந்திரத்தில் உள்ள நகாரம் சிவத்தை உணர்த்துவது போன்று, வகாரம் சக்தியை உணர்த்துவதும் நாம் இங்கே நோக்கத் தக்கது. எனவே வகாரத்தால் உணர்த்தப்படும் சக்தி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சோதியுள் = சூரியனின் உள்ளே. அட்ட மூர்த்தியாக விளங்கும் இறைவன், சூரியன் மற்றும் சந்திரனுடன் இணைந்து, அவர்களை இயக்க வைப்பதை நாம் அறிவோம். அவ்வாறு சூரியனின் உள்ளே சோதியாக இருக்கும் தன்மை இங்கே சோதியுள் சோதி வைத்தார் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. திருவாசகம் திருவண்டப் பகுதியில், மணிவாசகர் பெருமானை அருக்கனில் சோதி அமைத்தான் என்று குறிப்பிடுவது நாம் இங்கே நினைவுகூரத்தக்கது.</p><p align="JUSTIFY">வாமனை வணங்க வைத்தார் என்று கூறுவது நமக்கு பிருங்கி முனிவரின் வரலாற்றினை நினைவூட்டுகின்றது. பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்த அவர் அம்மையும் அப்பனும் அருகருகே வீற்றிருந்த போதும், அம்மையை வலம் வந்து வழிபடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு வண்டாக மாறி, அவர்களிடையே புகுந்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். சக்திதான், அனைத்து உயிர்களிலும் சக்தியாக இருந்து, அந்த உயிர்களை இயக்குகின்றாள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுத்த பிருங்கி முனிவருக்கு உண்மை நிலையை உணர்த்த, அம்மை அவரது உடல் சக்தியிழக்குமாறு செய்கின்றாள். அந்த நிலையிலும் அவர் மனம் மாறாதிருப்பதைக் கண்ட அம்மை, அவரது பக்தியை மெச்சினாள். மற்றும் பெருமானிடம் சிவம் வேறு சக்தி வேறல்ல என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம், பெருமான் தன்னை அவரது உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டியதை ஏற்றுக்கொண்டு, பெருமான் மாதொருபாகனாக விளங்கினார். அவ்வாறு விளங்கியதன் மூலம் பிருங்கி முனிவர் உட்பட அனைவரும் அம்மையையும் வணங்குமாறு செய்தார். மாதொரு பாகனின் தோற்றத்தை உணர்த்தும் வண்ணமாக வாமனை வணங்க வைத்தார் என்ற தொடர் விளங்குகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தனது இடது பாகத்தில் இருக்கும் உமையம்மையை அனைவரும் வணங்குமாறு செய்தவர் சிவபெருமான்; மக்கள் அனைவரும் தன்னை வாழ்த்துவதற்காக அவர்களுக்கு வாயினை வைத்து அதன் மூலம் அவர்கள் உய்வதற்கான வழி வகுத்தவர் சிவபெருமான்; தேய்ந்த நிலையில் வந்து சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்று, அவன் அழிந்துபோகாமல் காத்தவர் சிவபெருமான்; சூரியனின் உள்ளே சோதியாக நின்று அவன் ஒளி வீச உதவுபவர் சிவபெருமான்; பசுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பொருட்களை வைத்து, அந்த ஐந்து பொருட்களையும் கொண்டு தன்னை நீராட்டும் வாய்ப்பினை அடியார்களுக்கு வைத்தவர் சிவபெருமான்; மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவரும் தன்னிடமும் பிணைந்து இருக்குமாறு அன்பு எனப்படும் சாதனத்தை வைத்தவர் சிவபெருமான்; இவ்வாறு பல விதமான அருள்கள் செய்த சிவபெருமான் மன்மதன் மீது கோபம் கொண்டு அவனை எரித்த நெற்றிக் கண்ணினை உடையவராகவும், கழிப்பாலை தலத்தில் கடற்கரைத் தலைவராகவும் விளங்குகின்றார்.</p>
Advertisement