முகப்பு
தினம் ஒரு தேவாரம்

89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 2

வண்ணம் தேவர்களுக்கு

Updated On : 21 பிப்ரவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM


பாடல் 2:


    மலையார் பொற்பாவையொடு மகிழ்ந்த
         நாளோ வானவரை வலியமுதம் ஊட்டி அந்நாள்
    நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
        நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
    அலைசாமே அலைகடல் நஞ்சுண்ட நாளோ
        அமரர் கணம் புடைசூழ இருந்த நாளோ
    சிலையால் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ
       திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே


விளக்கம்:


அலைசாமே=வருந்தாமல்; இந்த பாடலில் தேவர்கள் மூப்படையாமல் நிலையான இளமை பெற்று இருந்த நிலையும், பாற்கடலில் பொங்கி எழுந்த நஞ்சினை உண்ட நிகழ்ச்சியும் கூறப்படுகின்றன. இந்த இரண்டும் வேறு வேறு நிகழ்சிகள் என்று, பெரிய புராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் கருதுகின்றார். 
 
பொழிப்புரை:

அழகில் சிறந்தவளும் மலைச்சாரலில் வளர்ந்தவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவனே, என்றும் மூப்பினை அடையாமல் இளமையாக இருக்கும் வண்ணம் தேவர்களுக்கு அமுதம் ஊட்டியவனே, எவரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத வண்ணம் விண்ணினையும் தாண்டுமாறு நெடிது உயர்ந்த தழற்பிழம்பாகி எழுந்து பிரமனும் திருமாலும் அடியும் முடியும் காண முடியாதவாறு நின்றவனே, நஞ்சினை உண்ணும் நிலை ஏற்பட்டதை குறித்து வருத்தம் ஏதும் அடையாமல் தயக்கம் ஏதும் இன்றி கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்டு அனைவரையும் காத்தவனே, தேவர்கள் அனைவரும் புடை சூழ்ந்து உனது புகழினைப் பாடும் வண்ணம் நின்றவனே. வில்லினை ஏந்தி திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்று ஒரே அம்பினால் அவர்களது மூன்று பறக்கும் கோட்டைகளையும் வீழ்த்தியவனே, பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.