முகப்பு
தினம் ஒரு தேவாரம்

89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 5

விடத்தினை அடக்கியதால்

Updated On : 24 பிப்ரவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM


பாடல் 5:

    பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே
         பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானே
    நீலமாமணி கண்டத்து எண் தோளானே
        நெருநலையாய் இன்றாகி நாளையாகும்
    சீலமே சிவலோக நெறியே ஆகும்
        சீர்மையே கூர்மையே குணமே நல்ல
    கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
        திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே


விளக்கம்:


பிறப்பில்லாத பெருமான் என்றும் நிலையாக ஒரே கோலத்தில், மூப்பு அடையாத குழகனாக இருப்பதால் அவனை பாலனாக கண்டவர் எவருமில்லை. மற்ற பல தெய்வங்களின் குழந்தை விளையாட்டுகளை குறிப்பிட்டு பாடல்கள் பல இலக்கியங்களில் காணப்படுகின்றன. மேலும் பிள்ளைத் தமிழ் நூல்களும் உள்ளன. ஆனால் சிவபெருமான் மீது பிள்ளைத் தமிழ் எவரும் இயற்றவில்லை. இந்த நிலையைத் தான் அப்பர் பிரான் இங்கே, பாலன் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே என்று இங்கே உணர்த்துகின்றார். நெருநல்=நேற்று .

பொழிப்புரை: 

குழந்தைப் பருவம் முதலான பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே, தன்னை வழிபடும் அடியார்களுக்கு பற்றுக்கோடாக விளங்குபவனே, விடத்தினை அடக்கியதால் நீலமாமணி பதித்தது போன்று தோன்றும் கழுத்தினை உடையவனே. எட்டு தோள்களை உடையவனே, நேற்று இன்று நாளை எனப்படும் மூன்று காலங்களாகவும் இருப்பவனே, சிவலோக நெறியினை அடியார்களுக்கு அளிக்கும் பண்பினைக் கொண்டவனே, புகழத்தக்க பண்புகளை உடையவனே, நுண்ணிய அறிவினை உடையவனே, நல்லொழுக்க குணங்களை உடையவனே, பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ, மேற்கண்ட குணங்களை எல்லாம் கொள்வதற்கு முன்னோ பின்னோ, நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.