முகப்பு
தினம் ஒரு தேவாரம்

85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 9

சடைமுடியை உடைய தூயவனே

Updated On : 18 ஜனவரி, 2018 at 1:21 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:30 PM


பாடல் 9

    பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர்
                                         போற்றும் பொருளே போற்றி
    தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு
                                        ஆழி அளித்தாய் போற்றி
    சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
                                       சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி
    சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
                                       திருமூலட்டானனே போற்றி போற்றி


விளக்கம்:


புத்தேளிர்=வானவர்கள்; சே=எருது, இடபம்; சதுரன்=திறமை படைத்தவன்; ஊழிக்காலத்தில் அனைவரும் இறந்த பின்னர், அவர்களது உடல்கள் எரிந்ததால் ஏற்பட்ட சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையில்லை என்பதை உணர்த்தும் வகையில் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இருக்கும் நிலை, சிவபெருமானது திறமையை, பெருமையை உணர்த்துகின்றது என்பதால், சதுரன் என்று நீற்றினைப் பூசிய செய்கையுடன் இணைத்துச் சொல்கின்றார். சாவாமே காத்தல்=பிறப்பு மற்றும் இறப்பினைத் தவிர்ப்பதன் மூலம், இறப்பிலிருந்து காப்பாற்றும் தன்மை.  
  
பொழிப்புரை:

கொன்றை முதலிய பூக்கள் நிறைந்த சடைமுடியை உடைய தூயவனே, தேவர்கள் போற்றும் பரம்பொருளே, தெய்வத்தன்மை பொருந்திய தேவர்களுக்குத் தலைவனாய் விளங்குபவனே, திருமாலுக்குச் சக்கரம் அளித்து அருளியவனே, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து என்னைக் காத்து நான் இனிப் பிறவாதவாறும் சாவாதவாறும் காத்தவனே, வெண்சங்கு நிறத்தினை ஒத்த திருநீற்றினை அணிந்த திறமையாளனே, இடபத்தினை சித்திரமாக உள்ள கொடியைக் கொண்டவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.