பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!
அஸ்ஸாம் முதல்வரின் மனைவிக்கு எதிரான வழக்கில் பாஜக விமர்சனம்..
அஸ்ஸாம் முதல்வரின் மனைவிக்கு எதிரான வழக்கில் பவன் கேரா முன்வைத்த குற்றச்சாட்டுகளில் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மாவின் மனைவி, ரினிகி புயான் சர்மாவிடம் பல கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் சொத்துக்களும் இருப்பதாகவும், ஆனால் நடந்துமுடிந்த பேரவைத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவை குறித்து எவ்விதத் தகவலும் குறிப்பிடப்படவில்லை என்று பவன் கேரா குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளை முதல்வரும் அவரது மனைவியும் மறுத்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பவன் கேரா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், அவருக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய கட்டாய நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள தகுந்த நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியிருந்தது.
Advertisement
இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களையே பவன் கேரா சார்ந்திருப்பதாகவும், கடந்த சில நாள்களில், பவன் கேராவுக்கு உச்ச நீதிமன்றத்திடமிருந்து இது இரண்டாவது பின்னடைவாகும்.
முதல்வர் மனைவிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் போலியானவை, புனையப்பட்டவை, போட்டோஷாப் மூலமும், செய்யறிவு மூலமும் உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்தது. இருப்பினும், அவர் தொடர்ந்து அந்தப் போலியான ஆவணங்களையே பயன்படுத்தியதோடு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சர்மா அவரது குடும்பத்தினரை அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யும் நோக்கத்துடன், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் தயாரிக்கப்பட்ட போலியான ஆவணங்களைக் காங்கிரஸ் தலைவர் சார்ந்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னணியாக இருந்து ஆதரவளித்ததாகவும், எதிர்க்கட்சியின் தலைமைக்கு அஸ்ஸாம் மற்றும் அதன் மக்கள் மீது வெறுப்புணர்ச்சி இருக்கின்றது. பவன் கேரா சிங்கமல்ல.. நனைந்த பூனை என்று அவர் குற்றம் சாட்டினார்.