முகப்பு
தினம் ஒரு தேவாரம்

124. வரமதே கொளா - பாடல் 4

இறைவனைத் தொழுவதன்

Updated On : 21 மார்ச், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:55 PM


பாடல் 4

    துங்க மா கரி பங்கமா அடும் செங்கையான் நிகழ் வெங்குருத் திகழ்
    அங்கணான் அடி தன் கையால் தொழத் தங்குமோ வினையோ

விளக்கம்:

Advertisement

துங்கம்=உயர்ந்த; பங்கமா=துன்பம் அடையும் வண்ணம்; அடும்=கொலைத் தொழில் புரியும்; நிகழ்=பொருந்திய; அங்கணான்=அழகிய கண்களை உடையவன்; கண்களின் பார்வைக்கு அழகு சேர்ப்பது கருணையாகும். எனவே அழகியை கண்களை உடையவன் என்று இறைவனை குறிப்பிட்டு, அவனது கருணைத் தன்மையை சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று கூறுவதும் பொருத்தமே. இந்த பாடலில் வரும் வெங்குரு என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ங். இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது. இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து இறைவனைத் தொழுவதன் சிறப்பு இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது நமது கரங்களை குவித்து தொழுதால், இறைவனது உள்ளம் குளிர அவன் நமக்கு அருள் புரிகின்றான் என்று உணர்த்தும் முகமாக கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க என்று சிவபுராணத்தில் மணிவாசகர் கூறுகின்றார். அங்கமாலை பதிகத்தின் பாடலில் (4.9.7) அப்பர் பிரான் கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. கைகளே, படம் எடுக்கும் பாம்பினைத் தனது இடுப்பில் கச்சையாக இறுகக் கட்டிய பிரானை. நறுமணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி, கைகளைக் கூப்பித் தொழுவீர்களாக. என்று தனது கைகளுக்கு அறிவுரை கூறும் வண்ணமாக அமைந்துள்ள பாடல் இது.     

    கைகாள் கூப்பித் தொழீர் - கடி
    மாமலர் தூவி நின்று
    பைவாய் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித் தொழீர்

பொழிப்புரை: 

உயர்ந்ததும் பெரியதும் ஆகிய ஆண் யானை, தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்டு தன்னை நோக்கி தாக்க வந்த போது, அந்த யானை துன்பமடையும் வண்ணம் அதன் தோலை உரித்து கொலை செய்த சிவந்த கைகளை உடையவனும், புகழுடன் திகழும் வெங்குரு என்று அழைக்கப்படும் தலத்தில் பொருந்தி உறைபவனும் அழகிய கண்களை உடையவனும் ஆகிய சிவபெருமானின் திருப்பாதங்களைத் தங்களது கையினால் தொழும் அடியார்களின் மேல் படர்ந்துள்ள வினைகள் அங்கே தங்காது அவர்களை விட்டு நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.