முகப்பு
thinkedu

சமூகத்தின் எதிரொலிப்பாக சினிமா திகழ்கிறது: சரத்குமார் பேச்சு

சமூகத்தின் எதிரொலிப்பாக சினிமா திகழ்கிறது என்றும் சினிமாவில் இருந்து இளைஞர்கள் மற்றும் சமுதாயத்தினர் எதையேனும் கற்றுக்கொள்கின்றனர் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:24 AM
பகிர்:

சமூகத்தின் எதிரொலிப்பாக சினிமா திகழ்கிறது என்றும் சினிமாவில் இருந்து இளைஞர்கள் மற்றும் சமூகத்தினர் எதையேனும் கற்றுக்கொள்கின்றனர் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 'இந்திய சினிமா இளைஞர்களுக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், சமூகத்தின் எதிரொலிப்பாக சினிமா திகழ்கிறது. சினிமாவில் இருந்து இளைஞர்கள் மற்றும் சமூகத்தினர் எதையேனும் கற்றுக்கொள்கின்றனர்.

மேலும், சினிமா ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது;  சமூகப் பிரச்னைகளை பேசுகிறது; சமுதாயத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. நிஜ வாழ்க்கை, திரையில் வரும் வாழ்க்கை ஆகிய இரண்டையுமே எடுத்துரைக்கிறது.

Advertisement

இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களின் வாயிலாக மக்களுக்கு ஏதேனும் ஒரு செய்தியை எடுத்துரைக்க வேண்டும். அது கல்வி, விளையாட்டு அல்லது சமூகம் சார்ந்த ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். சினிமாவில் சமூக தாக்கம் எப்போது ஏற்படத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால், அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது. 

நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். மக்களுக்கும் படத்தின் வாயிலாக ஏதேனும் செய்தி அளிக்க வேண்டும் என்று அவரின் வாயிலாகவே புரிந்துகொண்டு அதனை செயல்படுத்தியும் காட்டுகிறேன்.

அமிதாப் பச்சன் ஒரு சிறந்த நடிகர். அவர் திரையில் கருத்துகளை வெளிப்படுத்தும்விதம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. சமூகப் பிரச்னைகளையும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். பொழுதுபோக்குடன் சமூகத்திற்கான செய்தியும் இருக்க வேண்டும்.

எனக்கு ஒத்துப்போகாத சில காட்சிகளை நான் இயக்குநரிடம் கூறி தவிர்த்து விடுவேன். சில வசனங்கள், சில பாடல்களை எனது படத்தில் தவிர்த்திருக்கிறேன். மற்றபடி எனது சினிமாவில் விதிமுறைகள் ஏதும் இல்லை. எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. எனக்கான கதையை முதலில் இயக்குநர்கள்தான் முடிவெடுக்கின்றனர். முடிவு செய்த பின்னரே அவர்கள் என்னிடம் கதையை கூறுகிறார்கள். எனக்கு கதை பிடிக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்கிறேன். 

இயக்குநர்கள் திரையில் எதனைக் காண்பிக்க வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாகவே முடிவு செய்கிறார்கள். உணர்வுப்பூர்வமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் அவர்கள் கவனமாகவே இருக்கிறார்கள். சமீபத்தில் பல வித்தியாசமான படங்கள் திரைக்கு வந்துள்ளன. சமூகத்திற்கான படங்கள் தொடர்ந்து வரவேண்டும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments