முகப்பு
காதலர் தினம்

மனதில் விரும்பும் வரன் கிடைக்க அம்மனுக்கு தாலி கட்டும் இளைஞர்கள்!

மனதில் விரும்பும் வரன் கிடைக்க, இளைஞர்களும் இளம்பெண்களும் உமையாள்புரம் பாப்பாத்தி அம்மனுக்குத் தாலி கட்டும் வினோத வழிபாடு இங்கு இருந்து வருகிறது.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 4:21 PM
வாழப்பாடி அடுத்த உமையாள்புரம் ஏரிக்கரையிலுள்ள பாப்பாத்தியம்மன் சிலை.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:14 PM

வாழப்பாடி: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்புரம் கிராமத்தில், தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், மனதில் விரும்பும் வரன் கிடைத்திட, இளைஞர்களும், இளம்பெண்களும், பாப்பாத்தி அம்மனுக்கு தாலி கட்டும் வினோத வழிபாடு நடைமுறையில் இருந்து வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமங்களில், தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், பல்வேறு வினோத வழிபாட்டு முறைகள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.

இந்த வரிசையில்,பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்புரம் பாப்பாத்தி அம்மன் கோயில் இடம்பிடித்துள்ளது.

Advertisement

உமையாள்புரம் கிராமத்தில் ஒரு தரப்பினர் ‘ஐயர் பொண்ணு’ என குறிப்பிடப்படும் பாப்பாத்தியம்மனை குலதெய்வமாகக் கருதி, முன்னோர்கள் வழியாக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.  குல தெய்வமான பாப்பாத்தியம்மனுக்கு, குலதெய்வ பங்காளி குடும்பத்தினர் ஒன்றிணைந்து  உமையாள்புரம் ஏரிக்கரையில் ஆளுயர முழு உருவச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இந்த பாப்பாத்தியம்மனுக்கு தாலி கட்டி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மனதில் விரும்பும் வரன் கிடைப்பதாகவும் விரைவாகத் திருமணம் நடக்குமெனவும் இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

இதனால், தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், உமையாள்புரம் கிராமத்திலுள்ள பாப்பாத்தியம்மனுக்கு, இளைஞர்களும், இளம்பெண்களும் தாலி கட்டி வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உமையாள்புரம் இளைஞர்கள், இளம்பெண்கள் சிலரிடம் கேட்டதற்கு, ‘குல தெய்வமான ஐயர் பொண்ணு என குறிப்பிடப்படும் பாப்பாத்தியம்மனுக்கு, ஏரிக்கரையில் ஆளுர சிலை  அமைத்துள்ளனர். இந்த அம்மன் சிலைக்கு, திருமண வயதிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் தாலி கட்டி வழிபட்டால், மனதில் விரும்பும் வரன் கிடைப்பதோடு விரைவாக திருமணம் நடைபெறுமென நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதனால், உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் இக்கோயிலுக்கு வந்து, மனதில் விரும்பும் வரன் கிடைக்க வேண்டி பாப்பாத்தியம்மனுக்கு தாலி கட்டி வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயியில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும்போது, ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் வந்து அம்மனுக்கு தாலி கட்டி வழிபடுவார்கள்’ என்றனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.