தினமணி கதிர்

சிறுகதை: வேண்டுதல்..!

கிட்டத்தட்ட நாற்பது வருசமிருக்கும். அய்யனாரைப் பார்த்து... அம்மா, அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலால் இந்தத் தடவை எப்படியும் அவரைப் பார்த்துவிடுவதென்று கிளம்பினேன். கானல் நீர் காட்டும் கரிசல் மண்.

ஜெயப்பாண்டி

கிட்டத்தட்ட நாற்பது வருசமிருக்கும். அய்யனாரைப் பார்த்து...

அம்மா, அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலால் இந்தத் தடவை எப்படியும் அவரைப் பார்த்துவிடுவதென்று கிளம்பினேன்.

கானல் நீர் காட்டும் கரிசல் மண். கண்ணுக்கெட்டியது வரை சீமைக்கருவேல மரங்கள். பாதித் தோலுரித்த சாரைப்பாம்பு போல சிதிலமடைந்து கிடக்கும் சாலை.

அதிலிருந்து பிரிந்து செல்லும் மாட்டு வண்டிப்பாதையின் முடிவில் தென்படும் சிறிய குளம். அதன் கரையில் பேய் பிடித்து தலைவிரித்தாடும் பெண்போல கிளைபரப்பிய ஆலமரங்கள்!

தரையிலிருந்து நாலஞ்சடி உயரமிருப்பார். இருபக்கமும் தேவதைகள். முன்கால் ஒடிஞ்சு ஆறடி உயரத்தில் நிற்கும் மண்குதிரை!- இப்படித்தான் அய்யனாரை எனக்கு அறிமுகம்.

"எப்போ இடரு வந்தாலும் அவர நினைச்சுக்க.. எல்லாம் சரியாயிடும்' -ஐந்து வயதில் அப்பா சொன்னது இப்போதும் நினைவில் நிற்கிறது.

புழுதி கிளம்பும் சாலையில் கீச்...கீச் என போகும் மாட்டுவண்டியில் உறவுகளோடு, கிளம்பிப்போய் அய்யனாரை வழிபட்டது உண்டு.

சின்ன வயதில் எனக்கு உடம்புக்கு சரியில்லை என்றால், தனது தோளில் உட்காரவைத்து அய்யனார் முன்நின்று விபூதி பூசுவது அப்பாவின் வழக்கம். அவரது நம்பிக்கை வீண்போவதில்லை. ஆஸ்பத்திரிக்குப் போகாமலே குணமாகிவிடுவேன்.

"அய்யனாரு தீர்க்காத நோயவா ஆங்கிலமருந்து தீர்க்கப்போகுது?' என்று அப்பா அடிக்கடி சொல்வதும் உண்டு.

மாசித் திருவிழா கொண்டாட்டம் நடக்கிறபோது, அங்காளி, பங்காளிக எல்லாம் சேர்ந்து போயி கடாவெட்டி பொங்கல் வைப்பது வழக்கம்.

தேங்கா உடைச்சு, சூடம் சாம்பிராணி போட்டு, ஊதுவத்திய வாழைப்பழத்துல குத்திவைச்சு நீர் தொட்டு தெளிச்சு. அப்பாதான் பூஜைசெய்வார்.

மொட்டை போடணும்னா கண்ணார்பட்டி கண்ணுச்சாமியை கூப்பிடுவோம். அவரும் தலையை பிடிச்சுக்கிட்டு அப்பாகூட அரசியல் பேசிக்கிட்டே சொரட்டு, சொரட்டுன்னு தலைமுடியை வழிப்பார். கையில அஞ்சு ரூபாயும் சாப்பாடும்தான். கண்ணுச்சாமி சந்தோசமா கைகூப்பிட்டுப் போவார்.

மொட்டைபோட்டு குளத்துல குளிச்சிட்டு, தலையில சந்தனம் பூசிக்கிட்டாலே தனிசுகம்.

  சாமி கும்பிட்டதும், பொங்கல், தேங்காய், பழம் எல்லாத்தையும் சரிபங்கா வச்சு ஆலமரத்தடியில உட்கார்ந்து ஆடு..மாடு மேய்க்கறவங்க, அக்கம் பக்கத்துல இருக்கறவங்க.. என எல்லோரையும் கூப்பிட்டு பரிமாறுவோம்.

அப்போ, நானும் அக்காவும், கொஞ்சூண்டு சோத்த எடுத்துட்டுப் போயி அய்யனாருக்கு ஊட்டிவிடுவோம். இத அப்பா பார்த்தா கோபத்தோட அதட்டுவார். "சாமிக்கு எச்சில் சோத்தை வைக்கக் கூடாது' என எங்களைத் திட்டுவார்.

அப்போதெல்லாம் எனக்கு "கண்ணப்பநாயனார் கதை' தெரியாது.

சோறூட்டும் போது எங்களப் பார்த்து அய்யனாரு சிரிப்பதாகத் தோணும். அப்படி ஒரு தோற்றம் அவருக்கு.

அய்யனாருக்கு சின்ன திண்டு கட்டி மழை காத்துக்கு நனையாம இருக்க ஓடுல கூரைபோட அப்பா நினைச்சாரு. அதுக்கு உத்தரவு கேட்டு அய்யனாரு முன்னால பூ போட்டாக. ஆனா உத்தரவு கிடைக்கலையாம்.

வெயிலோ, மழையோ அய்யனாருக்கு சுதந்திரமாக இருக்கத்தான் விருப்பமாம். அதனால கட்டடம் கட்டுற எண்ணத்தையே கைவிட்டுட்டாங்க.

படிப்பு, வேலை என மதுரை வந்ததிலிருந்து குலதெய்வம் கும்பிட நேரமில்லாமப் போச்சு. இப்போ குழந்தை குட்டி என குடும்பஸ்தனா ஆன பிறகும் ரொம்ப வருசம் கழிச்சு அய்யனாரைப் பார்க்குற ஆவலோட, கமுதிப் பக்கம் போறேன்.

பழைய நினைவுகள் அலைமோதிய நிலையில் அய்யனாரு கோயிலும் வந்திருச்சு. கடைகள், கட்டடங்கள் என அந்த இடமே மாறியிருந்தது.

  பெரிய கோபுரம். நீண்ட பிரகாரம் எனக் கோயிலைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. இருபதடி உயரத்துல வெள்ளைக் குதிரை. கருப்பண சுவாமி உள்ளிட்ட சிறிய சன்னதிகள்.

குயிலின் ஓசை, மயிலின் நடமாட்டம் என அமைதி தவழும் இடமாகியிருந்த ஆலமரத்து அடிப்பகுதியில் மனிதக் கூட்டத்தின் இரைச்சல். அதையும் தாண்டிய ஒலிபெருக்கிகளின் ஓலம்.

மஞ்சள்படிந்த பால் போல இருக்கும் குளத்து நீர் இப்போது கழிவுநீர்க் கலந்து துர்நாற்றம் வீசிய நிலையில்...

நாற்பது வருசத்துல இப்படியொரு மாற்றமா? என வியந்தபோது "மாற்றம் என்பது மானிடத் தத்துவம்' என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரி நினைவுக்கு வந்தது.

கோயில் முன் அறிவிப்புப் பலகைகள். பூஜைக்கு, நேர்த்திக் கடன், மொட்டைக்கு என விதவித கட்டணங்கள் விவரமாக எழுதப்பட்டு கடைசியில் "நிர்வாக அலுவலர்' என குறிப்பிட்டிருந்தது.

"அரசாங்கம் ஏத்து நடத்துற அளவுக்கு அய்யானாரு புகழ் பரவிடுச்சு'- அப்பா என்னிடம் கூறியது சரியாகத்தான் இருக்கிறது.

பூஜைத் தட்டை அம்மா, அப்பா கொண்டு வர, மனைவி, குழந்தையுடன் அய்யனாரைக் காணும் ஆவலில் சிறப்பு தரிசனக் கட்டண வரிசையில் சென்றேன்.

பக்கத்தில் இருந்து சோறு ஊட்டிப் பார்த்த அய்யனாரு.. இப்போது என்னிடமிருந்து விலகி.. இருபதடி தூரத்தில்!

முகம் தெளிவாகத் தெரியவில்லை. தகதகவென மின்னும் உலோகத்தால் முகம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவரு சிரிக்கிறாரா? கோபத்தோட இருக்காரா? என எதுவும் புரியமுடியாத அளவுக்கு செயற்கை ஜோடனைகள்.

கண்களை மூடி சின்ன வயசுல பார்த்த அய்யனாரை நினைத்தேன். "நாலஞ்சடி உயரம். அவர் முன் காலொடிந்த மண் குதிரை. அக்காவுடன் சேர்ந்து, சோறூட்டிய போது சிரித்த சிநேகிதம்'- கண் திறந்தால் எல்லாம் மாயம்.

இப்போது என் மகள் கேட்டாள், "அப்பா அய்யனார கட்டிப்பிடிப்பேன்னு சொன்னீங்கேளே செஞ்சு காட்டுங்க' -கொஞ்சும் மழலை மொழி நெஞ்சில் அடித்தது போல இருந்தது.

கையிலிருந்த பொருளை யாரோ களவாடியது போன்ற உணர்வு இப்போது என் இதயத்தில்!

அய்யனாரைக் கட்டிப்பிடித்து சோறூட்டியதாக நான் கூறியது குழந்தையிடம் பொய்யாய்ப் போய்விட்டதே!- இதை எப்படி நான் நிரூபிப்பேன்?

அழுகை..அழுகையாய் வந்தது. அப்பாவைத் தேடினேன். அவராவது குழந்தைக்கு விளக்குவார் என்று.

அவரோ, ஏற்கெனவே கட்டணம் செலுத்தி அய்யனாரைப் தரிசித்துவிட்டதால் இப்போது இலவசத் தரிசன வரிசையில் தூரத்தில் நின்று எட்டி, எட்டி அய்யனாரைப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

"எப்போ இடரு வந்தாலும், அய்யனார நினச்சுக்கோ. எல்லாம் சரியாகிவிடும்' -சின்ன வயதில் அப்பா சொன்னது இப்போதும் நினைவுக்கு வந்தது.

"சாமீ.. காப்பாத்துங்க..' -அய்யனாரை நினைத்து கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டேன். அவருக்குத் தெரியாமலா இருக்கும்?, எனது வேண்டுதலின் அர்த்தம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT