பிப்ரவரி 14 - காதலர் தினம். உலகம் முழுவதும் இளம் காதலர்களால் மிகவும் குதூகலமாகக் கொண்டாடப்படும் இந்தத் தினத்தில்
சில மூத்த காவியக் காதலர்களை நினைத்துப் பார்ப்போம்:
ஜான்சனின் காதல்
ஆங்கில அகராதியை தயாரித்து அளித்தவர் சாமுவேல் ஜான்சன். அவர் தன் இருபத்தைந்து வயதில் நாற்பத்தாறு வயது நிரம்பிய விதவைப் பெண்ணான டெட்டி போர்ட்டர் என்பவரைப் காதலித்து மணந்துகொண்டார்.
தாந்தேயின் காதல்
புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாந்தே. தனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது தன் வயதையொத்த பேட்ரிக் என்ற சிறுமியிடம் மனதைப் பறிகொடுத்தார்(!). ஆனால் துரதிர்ஷ்டவசமாக பன்னிரெண்டு வயதில் அந்தச் சிறுமி இறந்து போய்விட காலமெல்லாம் அந்தப் பெண்ணை நினைத்து காதல் கவிதைகளை வடித்தார்.
நெப்போலியனும் ஜோசப்பைனும்
மாவீரன் நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை. திருமணத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார் நெப்போலியன். திருமணம் முடிந்து முப்பந்தைந்து மணி நேரம் மட்டுமே மனைவியுடன் இருந்துவிட்டு போர் முனைக்குச் சென்றுவிட்டார் நெப்போலியன். போர் முனையிலிருந்து நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐயாயிரம்.
காரல் மார்க்ஸ்-ஜென்னி
கம்யூனிச சித்தாந்தத்தின் தந்தை காரல் மார்க்ஸ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்தாளர். ஆனால் அவரது காதலி ஜென்னி, பிரபுக்கள் வம்சத்தவர். தன் காதல் கணவருக்காக தன் சுகங்களை எல்லாம் துறந்து வறுமையில் வாடினார் ஜென்னி. தன் கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன்னைத் தியாகம் செய்தார். ஜென்னியை போன்ற பெண் மனைவியாய் கிடைப்பது காலத்தின் கொடை என்றுதான் கூற வேண்டும்.
காதல் மலர்!
இத்தாலியில் வாழ்ந்த ரோபக்டோ என்பவர் அலெக்ஸாண்ரா என்ற பெண்ணை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போகும் நேரம் அலெக்ஸôண்ட்ராவுக்கு ரோபக்டோ மீது திடீரென்று கோபம் ஏற்பட நிச்சயதார்த்தம் நின்றது. அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு நாள் கூடத் தவறாமல் ரோஜா மலரை 1,480 நாட்களுக்கு அனுப்பினார் ரோபக்டோ. அப்படியிருந்தும் கோபம் தணியவில்லை. ரோபக்டோ இத்தாலியின் பிரதான நகரமான கின்னெட் வால்நகரின் மையப் பகுதியில் தனது காதலிக்காக 80 அடி அளவில், இதய வடிவிலான காதல் சிற்பத்தை பளிங்கு கற்களால் அமைத்தார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சிற்பம் எழுப்பப்பட்டது.
சில காதல் பொன்மொழிகள்
* காதல் என்பது கனவன்று அல்லது கண நேரத்து உடலின்பமும் அன்று. இரண்டு உள்ளங்களின் சேர்க்கை.
-காண்டேகர்
* இரு புதிய மனிதர்களுக்கு ஒருவரையொருவர் பூரணமாக்குவதற்காக ஒரு விந்தையான தவிப்பு உண்டாகிறதே, அதன் பெயர்தான் காதல். அது மலர்மாலை அன்று; நெருப்புப்பொறி.
-காண்டேகர்
* நாம் அனைவரும் காதலுக்காகத்தான் பிறந்தோம். வாழ்வின் ஆரம்பம் அதுதான். வாழ்வின் முடிவும் அதுதான்.
-டிஸ்ரேலி
* காதலிக்காமல் இருப்பதைவிட ஒரு தடவையாவது காதலித்து அதை இழப்பதே மேல்.
-டென்னிசன்
* நட்பு காதலாக மாறலாம், மாறுவதுண்டு; ஆனால் காதல் மட்டும் நட்பாக ஆவதில்லை.
-பைரன்
* காதல் என்பது கல்யாணத்தின் சூரியோதயம்.
-பிரெஞ்சுப் பழமொழி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.