தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நரம்புகள் அனைத்தும் ஊட்டம் பெற...!

"பிசுதாரணம்' என்று ஒரு சிகிச்சை முறையை இதுபோன்ற சூழ்நிலையில் ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. அதாவது தலையில் மூலிகைத் தைலத்தை ஒரு பஞ்சினாலோ துணியினாலோ வெதுவெதுப்பாக முக்கி எடுத்து "தாரணம்' அதாவது

எஸ். சுவாமிநாதன்

என் தாயாருக்கு வயது 57. ஏழு வருடங்களுக்கு முன்பு சர்க்கரை, ரத்த அழுத்தம் காரணமாக பக்கவாத நோயில் விழுந்துவிட்டார். அவருக்கு மலச்சிக்கல், சிலசமயம் கட்டுப்பாடு இல்லாத சிறுநீர், தூக்கம் குறைவு, கை, கால் வலி, தலைவலி போன்ற உபாதைகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளை ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?

-சேதுராமன், போடிநாயக்கனூர்.

மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு, நரம்புகளின் ஒத்துழையாமை போன்றவை அவருக்கு இந்த உபாதைகளைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிகிறது. தலையினுள்ளே அமர்ந்துகொண்டு மனதைக் கருவியாகப் பயன்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் மூளைக்கே ஆபத்து வந்துவிட்டால், நீங்கள் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறும் உபாதைகள் அனைத்தும் ஏற்படத்தான் செய்யும்.

"பிசுதாரணம்' என்று ஒரு சிகிச்சை முறையை இதுபோன்ற சூழ்நிலையில் ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. அதாவது தலையில் மூலிகைத் தைலத்தை ஒரு பஞ்சினாலோ துணியினாலோ வெதுவெதுப்பாக முக்கி எடுத்து "தாரணம்' அதாவது தரித்துக் கொள்ளுதல் என்று அதற்கு அர்த்தம் கூறலாம். "நஸ்யம்' எனும் மூக்கினுள் மூலிகை மருந்து காய்ச்சிய நெய் மருந்தை உருக்கி விடுதலும் நல்லதொரு சிகிச்சை முறையுமாகும். அவரின் உடல் எடை, உயரம், பசியின் தன்மை, அன்றைய உடல்நிலை ஆகியவற்றைப் பொருத்தே இந்த சிகிச்சைகளைத் தீர்மானிக்க வேண்டும். தங்களுடைய நீண்டதொரு கடிதத்தில் அவர் சாப்பிடும் உணவு முறைகள், இன்சுலின் ஊசிபோட்டுக் கொள்ளுதல் போன்ற விவரங்களைத் தெளிவாகக் கூறியிருப்பதால், அவற்றை மனதிற்கொண்டு கீழ்வரும் மூலிகைத் தைலத்தை பிசுதாரணத்திற்காகவும், நஸ்ய சிகிச்சைக்காகவும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

கார்ப்பாஸôஸ்த்யாதி எனும் மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக பஞ்சில் முக்கி எடுத்து தலையில் சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஊறவிடவும். காலையில், உணவுக்கு முன். அதற்கு முன் 4 சொட்டுக்கள் க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய் மருந்தை நீராவியால் உருக்கி மூக்கினுள் விட்டு உறியச் செய்யவும். தான்வந்திரம் எனும் மூலிகைத் தைலத்தை இரும்புக்கடாயில் சூடாக்கி, உடலெங்கும் தடவி ஊறச் செய்யவும். அதிக காற்றோட்டமில்லாத அறையில் இந்த சிகிச்சை முறைகளைச் செய்வது மிகவும் நல்லது. நரம்புகளின் உணர்வுகளைத் தூண்டிவிடும் நொச்சி, ஆமணக்கு, புங்கை, கல்யாண முருங்கை, கற்பூரம் போன்ற இலைகளை நறுக்கி சிறு துண்டுகளாக்கி மூட்டையாக காடாதுணியில் கட்டி சூடாக்கி, உடலெங்கும் ஒத்தடம் கொடுக்கவும். சுமார் 15 - 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுத்த பிறகு, அடுத்த அரை மணி நேரம் இந்த சூடான இலை ஒத்தடம் உடலில் தங்குமென்பதால் ஓய்வெடுத்து, அதன் பிறகு வெந்நீர் குளியல் செய்து கொள்வது நல்லது. உணவாக சூடான மிளகு ரசம், பருப்புத்துவையல், மோரைச் சூடாக்கி ஓமம், கடுகு நல்லெண்ணெயில் தாளிதம் செய்து சாதத்துடன் சாப்பிடுவது நல்லது. வாரமிருமுறையோ மூன்று முறையோ இந்தச் சிகிச்சை முறைகளைச் செய்தால் போதுமானது.

மூளை எனும் வேரில் வைக்கப்படும் இந்த எண்ணெய் முறைகளால், கை கால் தலைப்பகுதிகளில் கிளையாகப் பிரியும் நரம்புகள் அனைத்தும் ஊட்டம் பெற்று தங்கள் செயல்திறனில் மேம்படுகின்றன. வேருக்குத் தண்ணீர் விட்டதும் செடியின் கிளைகள், இலைகள், காய்கள் அனைத்தும் ஊட்டம் பெறுவதைப்போல, எண்ணெயினுடைய வீர்யமானது நரம்புகளை ஊட்டம் பெறச் செய்கின்றன.

ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகைக் கஷாய "எனிமா' சிகிச்சை முறைகள், சித்தாமுட்டி வேரைக் கொண்டு கஷாயம் காய்ச்சி, பாலுடன் கலந்து, நவர அரசியை அதில் வேக வைத்து உடலெங்கும் தடவித் தேய்த்துவிடும் "நவரக்கிழி' எனும் சிகிச்சை முறைகளாலும் அவருக்குப் பயன் ஏற்படும். ஆனால், இவற்றை வீட்டில் வைத்து செய்து கொள்ள முடியாதென்பதால் அவை பற்றிய மேலும் விவரங்கள் இங்கு தேவையிருக்காது.

 ஒன்றிரண்டு டீ ஸ்பூன் (10மிலி வரை) கந்தர்வஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெய் மருந்தை சுமார் 21 நாட்கள் வரை காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், குடல் வாயு, உடல் வலி உபாதைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT