வயது 85. சுமார் ஒரு வருடமாக தலையில் பொடுகு இருக்கிறது. பின்தலை, கழுத்தைச் சுற்றிலும் காலை, இரவு நேரங்களில் நல்ல அரிப்பு வருகிறது. மார்பு மேல்பகுதி, தொண்டை, முதுகு மேல்பகுதியிலும் அரிப்பு ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?
ஏ.நாராயணன், நசியனூர் ரோடு, ஈரோடு.
வயோதிகத்தில் இதுபோன்ற ஓர் உபாதை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால், காளான்வகை தொற்றினால் ஏற்படலாம். நமது தலையின் தோல் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற்கும் தொல்லை தரும் தொற்றுண்ணியைத் தான் பொடுகு என்கிறோம். பொடுகுகளால் நமது தலையில் எரிச்சல் மற்றும் அதீத வறட்சித்தன்மை ஏற்பட்டு விடும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதுடன் காளான்களையும் அழித்து வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. தங்களது நீண்ட கடிதத்தில் வேப்பெண்ணெய்யையும், நல்லெண்ணெய்யையும் கலந்து சூடு பண்ணி தேய்த்துவிட்டுக் கொண்டால் சுமாராகிவிடுகிறது என்றும், தேய்ப்பதை விட்டுவிட்டால் மறுபடியும் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நல்லெண்ணெய்க்கு மாற்றாக கடுகெண்ணெய்யை நீங்கள் முயற்சிக்கலாம்.
தலை மற்றும் மார்பு பகுதிகள் கபம் எனும் தோஷத்தினுடைய இருப்பிடமாக இருப்பதால் அந்த தோஷத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, பிசுபிசுப்பு போன்றவை அதிகமான நிலைகளில் தலையில் அரிப்பு, பொடுகுத் தொல்லை போன்றவை ஏற்படலாம். இந்த குணங்களுக்கு நேரெதிராகிய வறட்சி, சூடு, லேசு, ஊடுருவும் தன்மை, சொரசொரப்பு போன்ற குணங்களைக் கொண்ட மருந்துகளை தலைக்கு எண்ணெய் வடிவத்திலும், பூச்சாகவும் பயன்படுத்தினால் நிவாரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய ஏலாதி, அஸனவில்வாதி, அஸனமஞ்சிஷ்டாதி போன்றவை பயன்படத்தக்கவை. இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சிறிது சூடாக்கி அரிப்புள்ள பகுதிகளில் காலையில் வெறும் வயிற்றில் உள்ளபோது பூசி அரை, முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு வேப்பம்பட்டை, கருங்காலிக் கட்டை, அரசம்பட்டை, சரக்கொன்றைப் பட்டை, ஏழிலம்பாலைப் பட்டை போன்றவற்றில் கிடைத்த மட்டும் சேகரித்துக் கொண்டு தண்ணீரில் காய்ச்சி வெதுவெதுப்பாக தலையில் ஊற்றிக் குளிப்பது நல்லது.
கபத்தினுடைய குணங்களை அதிகரிக்கச் செய்யும் பால், தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை போன்றவை நீக்கப்படவேண்டியவை. உட்புற பிசுபிசுப்பை ஏற்படுத்தும் மீன், இறால், நண்டு, முட்டை போன்றவற்றையும் உணவில் சேர்க்கக் கூடாது. உணவில் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை சற்றே அதிகமாகச் சாப்பிடலாம். ஆரக்வதாதி கஷாயம், படோலகடுரோஹிண்யாதி கஷாயம், நிம்பாதி கஷாயம், திக்தகம், மஹாதிக்தகம் கஷாயம் ஆகியவற்றில் ஒன்றைத் தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரினுடைய ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்துச் சாப்பிட குணம் கிடைக்கலாம்.
பிறர் உபயோகப்படுத்தக்கூடிய துண்டு, சோப்பு, சீப்பு, சட்டை, படுக்கை, தலையணை உறை, போர்வை முதலானவற்றைப் பயன்படுத்தவேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் விதமாக எளிய நடைப்பயிற்சி, யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடலாம். இவற்றைக் கற்றுக் கொடுக்கும் நல்லதோர் ஆசானிடம் சேர்ந்து அறிந்து கொள்வதே நல்லது. உடல் வலுவைக் கூட்டும் ச்யவனப்ராஸம், ப்ராம்ஹரஸôயனம், அகஸ்த்யரஸôயனம், நாரஸிம்ஹரஸôயனம், அஷ்வகந்தாதி லேஹ்யம், ப்ருகத்சாகலாதி க்ருதம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் குடலின் தன்மை, பசித்தீயினுடைய செயல்பாடு ஆகியவற்றை ஊகித்தறிந்து சாப்பிடுவதற்கு ஏற்ற மருந்துகள். தேனில் ஊறிய நெல்லிக்காய், தேன் பேரீச்சை, தேன் அத்திப்பழம், பாதாம், பிஸ்தா பருப்பு, சாரபருப்பு, வாதுமைபருப்பு போன்றவையும் வயோதிகத்தில் குடல் மற்றும் பசித்தன்மையின் நிலையைப் பொருத்து நன்கு அறிந்து சாப்பிடுவதற்கு ஏற்றவை. இதன் மூலமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் நன்றாக வளர்த்துக் கொள்ளலாம்.
பொடுகுத் தொல்லையிருக்கும்போது, சிலருக்கு அரிப்புடன் எரிச்சலும் ஏற்படும். அதுபோன்ற நிலைகளில் வேப்பிலை, மஞ்சள், அருகம்புல் ஆகியவற்றை அரைத்துப் பூசலாம். அதுபோல, காய்ந்த வேப்பம்பூவை 50 கிராம் எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளித்தால், பொடுகுப் பிரச்னை தீரும். சலூனுக்குச் சென்று அடிக்கடி முடிவெட்டிக் கொள்வதைத் தவிர்ப்பது நலம். கற்றாழையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத ஷாம்புகளில் புதிய திசுக்கள் மற்றும் செல்களைத் தூண்டும் திறனுடைய பெக்டின் என்ற வேதிப்பொருள் அடங்கியுள்ளதால் அவற்றைப் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.