எத்தனை படங்களில் எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தால் என்ன? 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் மகாகவி பாரதியாராக எஸ்.வி.சுப்பையா நடித்திருந்த சிறப்பை பாரதியார் நினைவு வரும் வரை இலக்கியக் கலைஞர்கள் மறக்க மாட்டார்கள்.
இதோ நீதிமன்றத்தில் சுப்பையா நிற்கிறார்.
இல்லை. மகாகவி பாரதி நிற்கிறார்.
''உமது பெயர்''
''எமது பெயர் சுப்பிரமணிய பாரதி!''
''உமது தொழில்?''
''எமக்குத் தொழில் கவிதை! நாட்டுக்குழைத்தல்! இமைப் பொழுதும் சோராதிருத்தல்!''
''சிதம்பரம் பிள்ளை, சிவம் இவர்களை உமக்குத் தெரியுமா?''
''சூரியனையும் சந்திரனையும் தெரியுமா என்று கேட்கிறீரே.. சிவம், சிதம்பரம் இருவரும் எனது இரு கண்மணிகள். இவர்களை இழந்தால் பாரதி பார்வையற்ற குருடனாவான்.''
''இவர்களது பிரசங்கங்களை நீர் கேட்டிருக்கிறீரா?''
''நான் மட்டுமென்ன? நாடே கேட்டது! நல்லுணர்வு பெற்றது!''
''நீர் உமது பத்திரிகையில் அவற்றை வெளியிட்டதுண்டா?''
''ஓ. அதைவிட எனக்கு வேறு வேலை என்ன இருக்கிறது? எமது பத்திரிகை மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாமே அவற்றை வெளியிட்டன.''
''அப்போது தடையுத்தரவு அமலில் இருந்தது. அதை மீறுவது குற்றம். அதனால் ஆபத்து வரும் என்று நீர் உமது நண்பர்களுக்குச் சொன்னீரா?''
'' சத்தியப் போர் செய்யும் சுதந்திர வீரர்கள் ஆபத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.''
''உம்மையும் ஒரு ராஜத் துரோகி என்று நான் கூறுகிறேன்.''
''கூறிக் கொள்ளும்! நன்றாக, நானூறு முறை கூறிக் கொள்ளும்! கவலையில்லை!''
''சரி. நீர் போகலாம்''
''போகிறோம்!''
மகாகவி பாரதியராக நடித்த எஸ்.வி. சுப்பையா போய்விட்டார். ஆனால், சுப்பையாவின் நினைவு போகாது. அதைவிட, பாரதியாரின் நினைவும்,
'கப்பலோட்டிய தமிழன்' படமும் பல நூறு ஆண்டுகள்
தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும்.
(டிச. 11- மகாகவி பாரதியாரின் பிறந்த நாள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.