மைக்ரோ கதை
"நளினி குட்டி, சமத்தா தூங்கப் போம்மா? அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கும்மா? சொன்னா கேளு..'' என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள் நளினியின் அம்மா.
அங்கு வந்த அவள் பாட்டி, "நளினி..
இங்கே வா? நான் உனக்கு கதை சொல்றேன்'' என்றார். பாட்டியுடன் சென்றாள் நளினி.
Advertisement
"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.''
"ஹூம் ..''
"அவர் ரொம்ப நல்ல ராஜாவாம்....''
"ஹூம் ..''
"ஏழைகளுக்கு தானம் செய்வாராம்.. எல்லோரும் சுகமா இருந்தாங்களாம் ..''
"ஹூம்...''
"ஒரு நாள்.. திடீர்ன்னு ........அங்கே ........''
"அம்மா...பாதி கதையில பாட்டி தூங்கிப் போயிட்டாங்க?'' என்று நளினி கூச்சலிட, பாட்டியின் குறட்டை சத்தம் வீடே அதிர்ந்தது.
- கே. அம்புஜவல்லி, புத்தூர்-620017.