சித்தரிக்கப்பட்டது 
தினமணி கதிர்

ஆயக்கால்

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் வியலூர் கிராமத்திலிருந்த பூர்விக வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் செட்டிலானார் பாண்டுரங்கன்.

DIN

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் வியலூர் கிராமத்திலிருந்த பூர்விக வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் செட்டிலானார் பாண்டுரங்கன். ஒருகட்டத்தில் தன் அண்ணன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு, காஞ்சிபுரத்தில் ஆன்மிக அறக்கட்டளை ஒன்றில் சேவை செய்துகொண்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி நின்ற அந்த அறக்கட்டளையின் கும்பகோணம் கிளையில் உருவாகியிருந்த ஒரு சட்டச் சிக்கலுக்குப் பரிகாரம் காணஅனுபவமிக்க, பாண்டுரங்கனை அனுப்பியது தலைமை நிர்வாகம்.

கும்பகோணம் வந்த பாண்டுரங்கனுக்கு, அங்கிருந்து எட்டாவது கிலோ மீட்டரில் இருக்கும் தன் பூர்விக ஊரான வியலூருக்குச் சென்று வரவேண்டும் என்ற இயல்பான ஆசை எழுந்தது. 'காமாட்சி ஜோசியர் தெரு'வில் இயங்கி வந்த அறக்கட்டளையின் கட்டடத்தில் தங்கியிருந்த பாண்டுரங்கன், பாலக்கரை காவிரிப் பாலத்துக்கு மேற்கே, வட

கரையில் பழைய நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டே நடந்தார். பத்து வருடங்களில்தான் எத்தனை மாற்றங்கள்.

அரசுக் கலைக் கல்லூரிக்குள் செல்லும் ரமணி ராமய்யர் பாலம் கடந்து, பக்தபுரி தெருவையும் கடந்து, நீதிமன்ற வளாகத்தில் போய் நின்றார்.

'டாக்குமென்ட் ரைட்டராக' ஆயிரக்கணக்கில் பிராதுகள், மத்யஸ்தங்கள், மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள், வில்லங்கச் சான்று, தஸ்தாவேஜுகள்.. என தன் கையால் எழுதித் தந்து - சம்பாத்தியம் நடத்திய, காலங்கள் கண்முன் விரிந்தன.

நீதிமன்ற நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த பாண்டுரங்கன், தான் சார்ந்திருக்கும் அறக்கட்டளையின் தற்போதைய சட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்கான செயல்முறைகளை முறையாகச் செய்தார். மனுவோடு, மனு கட்டிய ரசீதுகளின் நகல்களை இணைத்து, உரிய இடத்தில் ஒப்படைத்தார். மனு முறையாகப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற முத்திரையைப் பதித்த ஒப்புகைச் சீட்டை வாங்கிக் கொண்டார்.

வியலூரில், பாண்டுரங்கன் குடும்பத்தை, 'கோர்ட்டார் வீடு' என்றுதான் சொல்வார்கள். பாண்டுரங்கனின் அப்பாவும் டாக்குமென்ட்-ரைட்டர்தான். தகப்பன் கலையை நன்கு அறித்த பாண்டுரங்கன், ஒருகாலத்தில் இதே நீதிமன்ற வளாகத்தில், காசும் புகழும், நிறைய சம்பாதித்தவர்தான்.அதெல்லாம் ஒரு காலம்.

பாண்டுரங்கனுக்கு ராமானுஜன் என்ற அண்ணன். கும்பகோணம் கல்லூரியில்தான் படித்தார். 'ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்' எழுதித் தேறியதால், அரசுப் பணி கிடைத்ததுஅவருக்கு. பூர்வ ஜன்மப் பலனாக, நல்ல பணி கிடைத்ததும், கையோடு வலங்கைமான் தேசிகாச்சாரி மகளை அவனுக்குத் திருமணமும் செய்துவைத்தார் அப்பா.

திருமணமான அடுத்த வருஷமே ராம-லட்சுமணர்போல இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு காலமாகிவிட்டாள் ராமானுஜத்தின் மனைவி.

மருமகள் இறந்த துக்கத்தில், ஏக்கம் பிடித்து ஒரு மாதத்துக்குள் அப்பா காலமாகிவிட, அடுத்த மூன்றாவது மாதத்தில், நடை பிணமாக நடமாடிய பாண்டுரங்கனின் அண்ணன் ராமானுஜமும், ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். நீதிமன்ற வளாகத்தில் நிற்கும்போது, படித்த கல்லூரியும், அண்ணனின் பிரேத பரிசோதனை நடைபெற்ற அரசினர் மருத்துவமனையையும் பார்த்துப் பார்த்துக் கண்கலங்கினார் பாண்டுரங்கன்.

அண்ணன் காலமானவுடன், பச்சை மண்ணாகப் பரிதவித்த இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் பாண்டுரங்கன். 'திருமணம் செய்துகொண்டால் இந்தக் குழந்தைகளுக்குப் பங்கம் வந்துவிடுமோ?' என்று பயந்து, அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

'வேலைக்குப் போகும் நேரத்தில், குழந்தைகளை யாரு பார்த்துப்பா..? என்று உரிமையாகக் கேட்டு, வியலூர் வேத பாடசாலையில் சமையல் வேலை செய்து வயிற்றை கழுவி வந்த லட்சுமியை ஏற்பாடு செய்துவிட்டாள் பண்டரிபாய். 'ப்ராப்தம் இருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து வாழட்டுமே..' என்கிற எண்ணமும் இருந்தது பண்டரிபாய்க்கு.

வீட்டில் சமையல் முடித்து, மதியத்துக்கு டப்பாவில் கட்டிக் கொண்டு தொழில் செய்ய பாண்டு, நீதிமன்ற வளாகத்துக்கு சைக்கிளில் புறப்படும் நேரத்தில், பாடசாலையில் சமையலை முடித்துவைத்து

விட்டு வந்துவிடுவாள் லட்சுமி. குழந்தைகளை மட்டுமல்ல; பாண்டுவையும் நன்கு கவனித்துப் பார்த்துகொண்டாள் லட்சுமி. எந்த இடத்திலும் இரட்டையர்கள் என்று காட்சிப்படுத்தாமல், இயல்பாக இருவரையும் வளர்த்தார்கள் இருவரும்.

அந்தி மயங்கும் வேளையில் சைக்கிளை மிதித்துக் கொண்டு, வீட்டை அடையும் பாண்டுவுக்கு, சுடச் சுடக் காப்பி ஃப்ளாஸ்கில் இருக்கும். இரவு டிபன், ஹாட்பாக்கில் இருக்கும்.

நீதிமன்றம் இல்லாத நாள்களில், 'நான் வீட்லதானே இருக்கேன் பாத்துக்கறேன். நீ வர வேண்டாம் லட்சுமி..' என்றுவிடுவார்.

'தடுமாறி விடுவோமோ' என்று அஞ்சி, தரையைப் பார்த்துகொண்டு, எச்சரிக்கையாய்த் தன்னைத் தவிர்ப்பதை பார்த்து, மூக்கும் முழியுமாக விண்ணென்று இருக்கும் லட்சுமி தனக்குள் ஒரு வெட்கச் சிரிப்புச் சிரித்துக் கொள்வாள்.

குழந்தைகளுக்கு ஐந்து வயதானதும் உள்ளூர் போர்டு பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளைக் கொண்டு போய் சேர்த்தான் பாண்டு.

'இந்தக் கிராமத்துல உனக்கு என்ன வெச்சிருக்கு பாண்டு, வீட்டையும் தோப்பையும் கிரயம் பண்ணிட்டு, கும்பகோணத்தோட போயிடேன்.' என்று உறவுகளும், நட்பும் யோசனையும் சொன்னார்கள்.

'இது மைனர் சொத்து, குழந்தைகள் மேஜராகும் வரை இதை விற்க முடியாதாக்கும்' என்று அவர்களுக்கு சட்ட பாயின்ட்டோடு, விளக்கம் சொன்னார் பாண்டு.

'குழந்தைகள்தான் வளர்ந்துடுத்தே...ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோயேன்.'

'தாலி கட்டிண்டவதான், கடைசி நேரத்துல ஒரு லோட்டா கஞ்சி வைச்சிக் கொடுப்பாளாக்கும்.'

'எங்கேயும் பொண்ணு தேடிண்டுப் போக வேண்டாம். கையிலேயே வெண்ணெய்யை வெச்சிக்கிட்டு நெய்க்கு அலைவாங்களா?' என்றெல்லாம் ஆத்மார்த்தமாய் நிறைய நிறைய யோசனைகளும் சொன்னார்கள் அனுபவஸ்தர்கள். எதற்கும் எதிர்வினையாற்றவில்லை பாண்டு.

உள்ளுரில் தொடக்கப் படிப்பு முடித்தவுடன், கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பிளஸ் 2 வரை படித்தார்கள் குழந்தைகள். அவர்களின் அப்பா ராமானுஜம், படித்த கும்பகோணம் கல்லூரியில் ஒருவன் ஆர்ட் பிரிவும், மற்றவன் சயன்ஸ் பிரிவும் படித்தனர். கல்லூரிப் படிப்போடு, டைப்பிங், ஷார்ட் ஹாண்ட் என்று கும்பகோணம் டெக்னிகல் இன்ஸ்டிடியூட், சாரிடம் சொல்லி ஏற்பாடு செய்துகொடுத்தார் பாண்டு. கிராமத்திலிருந்து வந்து போக, அவர்களுக்கு மோட்டார் பைக்கும் வாங்கித் தந்தார்.

இருவருக்கும் சென்னையில் இரு வேறு கம்பெனிகளில் வேலை வந்தது. தன் அண்ணன் மகன்கள், மேஜராகிவிட்டதால், அவர்களிடம் நிலைமையை விளக்கி, அவர்களின் பூர்ண சம்மதத்துடன், வீடு உள்பட கிராமத்துச் சொத்துகளை கிரயம் செய்துவிட்டு, சென்னைவாசியானார் பாண்டு. இத்தனை வருஷம் தாயாய் இருந்து வளர்த்த லட்சுமியிடம், 'உனக்குப் பாடசாலை வேலை இருக்கு..உன்னால மெட்ராஸூக்கு வரமுடியாதே' என்று ஆறுதல் சொல்லிக் கொண்டார். லட்சுமிக்கு பாண்டுவின் தவிப்புப் புரியாமல் இல்லை.

சென்னையில் ஒரு வீடு வாங்க அலையாய் அலைந்தார் பாண்டு.அந்த நேரத்தில், புரோக்கர்களிடம், குழந்தைகளின் ஜாதகங்களைக் காட்டி ஆங்காங்கே சொல்லி வைத்ததில், வரன்கள் குவிந்தன. ஜாதகம், குடும்பப் பின்னணி அனைத்தையும் விசாரித்து, ஒரே முகூர்த்தத்தில் ஆடம்பரமில்லாமல் கல்யாணம் செய்துவைத்தார். திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவில் ஒரு சிறிய ஓட்டு வீடு வாங்கி பத்திரப் பதிவு செய்த அதே நாளில், தங்கள் இரண்டு குழந்தைகளின் திருமணத்தையும் பதிவு செய்தார் பாண்டு.

ஒரு நாள் எதேர்ச்சையாக, சாட்டை வெங்கடாசலத்தை பார்த்தசாரதி கோயில் அருகில் பார்த்தார் பாண்டு. வியலூர் பற்றி விசாரித்தார். வியலூர் வேத பாடசாலையை இழுத்து மூடிவிட்டதாகச் சொன்னான் வெங்கடாசலம்.

'பாவம்..லட்சுமி.. இப்போ எங்கே இருக்காளோ? என்ன பண்றாளோ?' என்று நினைத்துக் கொண்டார் பாண்டு.

திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவில் வாங்கிய ஓட்டு வீட்டில் சரியாக ஒன்றரை வருடங்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக இருந்தார்கள்.

மூத்த மருமகள் உண்டாகியிருந்த நேரத்தில், 'தனி வீடா இருந்தாக்க, எல்லாருக்குமே வசதியா இருக்கும் சித்தப்பா..' என்று ஒருநாள் காது கடித்தான் மூத்தவன்.

ஒரு கணம் நிலைகுலைந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், நிலைமையைப் புரிந்து கொண்டார் பாண்டு.

சுங்குவார் வீட்டை விற்று, ஒரே அடுக்ககத்தில், 'இரண்டு ஃப்ளாட் வாங்குவோமா?' என இருவரையும் ஜோடிகளாக நிற்கவைத்து அபிப்ராயம்கேட்டார் பாண்டு.

'எட்டி இருந்தாத்தான் உறவு நிலைக்கும்!' என்றான் மூத்தவன்.

இது, கூடப்பிறந்தவனுக்கு மட்டுமில்லை, தனக்கும்தான் என்பதை முதன் முதலில்,உணர்ந்தவர் பாண்டுதான்.

இருவேறு இடங்களில் குழந்தைகள் பெயரில்'ஃப்ளாட்' வாங்கிக் குடிவைத்தார்.

தன்னை ஏலம் போடுமுன் சுதாரித்த பாண்டு, 'வீட்டில் உட்கார்ந்து பொழுது போகலை, அதனால் 'ட்ரஸ்ட்'ல சேவை செய்யலாம்னு இருக்கேன்' என்று சொல்லிவிட்டு காஞ்சிபுரத்துக்கு வந்துவிட்டார். அதன்பின் நாள் கிழமை, நல்லது கெட்டது என்று எதற்கும் அவர்களும் அழைக்கவில்லை. இவரும் போகவில்லை.

ட்ரஸ்ட் கட்டடத்துக்கு அருகாமையில் ஒரு பத்துக்கு பதினைந்து அறையே பாண்டுவுக்கு உலகமானது. எண்ணங்கள் வரிசைக் கட்டி, 'நான் முந்தி நீ முந்தி' என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.

பாண்டுரங்கன் வியலூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினார். வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவத் தொடக்கம் என்பதை அங்கே கட்டப்பட்டிருந்த, பிரம்மாண்டமான 'ஃப்ளக்ஸ்' மூலம் அறிந்து மகிழ்ந்தார். பத்து ஆண்டுகளுக்குமுன் வியலூர்வாசியாகக் கண்டுகளித்த வசந்த உற்சவத் தொடக்கம் மனதில் விரிந்தது.

உற்சவம் தொடங்கும் நாளில் மேளதாளம் முழங்க, பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்தின் பின்னணியில், கைத்தலத்தில் கட்டப்பட்ட உற்சவரை வையாளி போட்டபடி சுமந்து வந்து பலிபீடத்தின் முன் ஆயக்கால்களில் வைத்து நிறுத்துவார்கள். வாரைக்குத் தோள்தரும் பக்தர்களுக்குத் தோள் தருவதுதானே ஆயக்கால்.

அதிர்வேட்டுகள், பக்தர்களின் 'கோவிந்தா...' கோஷங்கள் வானைப் பிளக்கக், காவி நிறத்தில் பளிச்செனப் பறக்கும் கருட பகவான் உருவம் வரையப்பட்ட, மஞ்சள் வஸ்திரக் கொடியை, பட்டாச்சாரியார் பறக்கவிடக், கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கும். அதைத் தொடர்ந்து, நாலுகால் மண்டபத்துக்கு வந்து சேருவார் பெருமாள்.

பெருமாளின் ஏகாந்தமான திருமஞ்சனத்துக்காக, பத்தாறு வேட்டிகளையோ, நூல் புடவைகளையோ, அல்லது புடவையும் வேட்டியும் கலந்தோ, கையில் கிடைத்ததை எடுத்து, நான்குத் தூண்களையும் இணைத்து, இரண்டு, மூன்று சுற்றுகள் போட்டு மறைப்புக் கட்டுவார்கள். ஏன் தெரியுமா? முதல் சுற்றில் ஆங்காங்கே வாய் திறந்து, நாக்கைத் தொங்கவிட்டவாறு தெரியும் கிழிசல்களை, அநேகமாக, இரண்டாம் சுற்று மறைக்கும். அதிலும் மறையாத கிழிசல்களை மூன்றாம் சுற்று நிச்சயமாக மறைத்துவிடும் என்பதுதான் ஐதீகம்.

மறைப்புக்குள் கைத்தலக் கட்டுகளை அவிழ்த்துப் பெருமாளை, மண்டபத்தின் மையத்தில் கிடத்தப்பட்ட அபிஷேக தாரையின் நடுவில் ஏலச் செய்தவுடன் மறைப்பைத் தூக்கிப் பிடித்துகொண்டு கைத்தலத்தை வெளியேற்றுவார்கள். அதற்குப் பின் பெருமாளுக்கு ஏகாந்தமாகத் திருமஞ்சனம் நடைபெறும். வேத கோஷ்டியினர் ஒருபுறம் நின்று புருஷசூக்தம், ஸ்ரீசூக்தம் போன்றவைகளை ஸ்வரத்தோடு முழங்குவார்கள். ஆழ்வார் பாசுரங்களை அதற்கே உரித்தான தொனியில் பாடிப் பரவசப்படுத்துவார்கள் பிரபந்த கோஷ்டி

யினர்.

திருமஞ்சனம் முடித்த பிறகு மீண்டும் கைத்தலத்தை உள்ளே வாங்கி, அதில் உற்சவரை வைத்துக் கட்டியவுடன் சுற்றிலும் கட்டியிருந்த மறைப்புகளை அகற்றுவார்கள்.

பட்டாச்சாரியார், சிரத்தையாக சோடச உபசாரங்கள், தீபாராதனை எல்லாம் விசேஷ

மாக முடித்ததும், கைத்தலப் பெருமாளை நான்கு பேர்தூக்கிக்கொண்டு வாகனம் வைக்கப்பட்டிருக்கும் அலங்கார மண்டபத்துக்குச் செல்வார்கள்.

அலங்கார மண்டபத்தில், வாகன பீடத்தின் கால்களுக்கு அடியில் கிடத்தப்பட்ட வாரைகளோடுப் பிணைத்து, தாம்புக் கயிற்றால் குறுக்கும் நெடுக்குமாய் இறுக்கமாய் வரியப்பட்டு, அன்றைய புறப்பாட்டுக்கான வாகனம் தயாராக நிற்கும். கைத்தலத்தில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்த்து, கனமாய்க் கனக்கும் ஐம்பொன் உற்சவரை மார்போடு சேர்த்து அணைத்துத் தூக்கி வாகனத்தின் மேல் அமர்த்துவார் பட்டாச்சாரியார். வாகனத்தில்பெருமாளை ஏற்றியதும், அலங்கார மண்டபத்தின் முகப்பில் ஓரமாய் தொங்கிய திரைச் சீலையை இழுத்து விட்டு திரைச்சீலையில் வரையப்பட்ட வைணவத் திருச்சின்னங்கள் பார்வையில் படுமாறு மறைப்பார்கள்.

சாட்டை மாலை, சரம், கதம்பம், திருத்துழாய் மாலை, வாழை நார்ப் பட்டைகள், வெட்டிவேர்க் கொத்துகள், கருப்பு, சிகப்பு அரைணாக்கயிறுகள், மூங்கில் சிம்புகள், துய்யாச் சுருள்கள், ஜிகினாக் காகிதங்கள், கத்தரிக்கோல்கள், கோணூசி, சணல், நூல் கண்டுகள், பளபளக்கும் கவரிங் நகைகள், மூட்டை மூட்டையாக மடித்த வாடையோடு கூடியப்

பழைய வஸ்திரங்கள், திண்டுகள், பட்டுப் பீதாம்பரங்கள், அபயஹஸ்தம், வரதஹஸ்தம், வெண்ணெய்த்தாழி, சாட்டை, இப்படி அந்தந்த, அலங்காரத்துக்குத் தேவையான, தேவையற்ற அனைத்தும் சிதறிக் கிடக்க, அலங்காரம் அமர்க்களப்படும்.

'ஏய் இதைப் பிடிச்சிக்கோ', 'அந்தக் கத்தரிக் கோலை எடு!', 'இன்னும் கொஞ்சம் டைட்டா கட்டு..' தொள தொளனு ஆடறது பாரு?', 'ஏய்... எட்ட நின்னுப் பாத்துச் சொல்லு..', 'மேலண்ட கை கொஞ்சம் தூக்குங்கோ?', 'ரொம்ப தூக்கிட்டேள்.. கொஞ்சம் தாழ்த்துங்கோ...?', 'ம்...!ம்...!ம்...!.. அப்படியே வெச்சிக் கட்டுங்கோ...! கச்சிதமா இருக்கு?', 'வாரை போட ஆசாமியெல்லாம் வந்துட்டாளா?', 'குடைய ரெண்டு கம்பி விட்டுப் போயிருந்துதே, அதை சிம்பு வெச்சிக் கட்டியாச்சா...?-என்று எட்டுகண் விட்டெறிந்துப் பேசியபடி, பட்டாச்சாரியார் அலங்காரத்தை முடிப்பார்.

அலங்காரம் முடியும் நேரம், வாகன மண்டபத்துக்கு வெளியே, ஒரு எண்ணெய் பிசுக்கு ஏறிய ஸ்டூலில் அடுக்கு தீபாராதனை ஏற்றித் தயாராய் வைத்திருப்பார் திருவிழாவுக்காக வரவழைக்கப்பட்டச் சிறப்பு அர்ச்சகர். பக்கத்தில் கிடக்கும் விசி பலகையில் , ஈயம் பல்லிளித்த, பித்தளைத்தாம்பாளத்தில் அடுக்கப்பட்டப் பட்டைச் சோறு, ஈரத் துணி போட்டு மூடப்பட்டிருக்கும். அந்தத் துணியைப் பார்க்கும் எவருக்கும், 'அதை வாங்கித் துவைத்துக் காயவைத்துக் கொடுத்துவிட்டு வரலாமா...?' என்றுதான் தோன்றும்.

பட்டாச்சாரியார் மணி அடிக்கும்போது பிரசாதத் தட்டின் மேல் போர்த்தப்பட்டத் துணியைத் லேசாகத் தூக்கிப் பெருமாளுக்குக் காட்டுவதற்குத் தயாராக நிற்பார் கோயில் பரிசாரகர். சற்றுத் தள்ளி தீவட்டி பிடித்து நிற்பான் வெள்ளிங்கிரி.

இப்படி மலரும்நினைவுகளோடு, கோயிலை வந்தடைந்தார் பாண்டு...

அலங்கார மண்டபத்தில், சுவாமி புறப்பாட்டுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, நான்கு டயர்கள் பொருத்தப்பட்ட வண்டியின் மேல் கருடவாகத்தில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார் பெருமாள். எட்ட எட்ட பெயருக்குக் கட்டப்பட்ட ஒரு சாட்டை மாலையும், சில ஆரங்களும் மட்டும் பெருமாள்மேல் தொங்கின.

'கோவிந்தா' கோஷத்துடன் சுற்றிலும் பக்தர்களின் கூட்டம் இல்லை. அங்கொருவர் இங்கொருவருமாகத்தான் இருந்தார்கள். பட்டாச்சாரியர் உள்பட தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை.

வாகன மண்டபத்தில் வரிசையாகத் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் பார்த்தார். கடைசி அங்கணத்தில், தற்போது உபயோகத்தில் இல்லாத, ஆயக்கால்கள் பராமரிப்பின்றிக் கிடந்தன பாண்டுரங்கனைப் போலவே.

அங்கிருந்து நகர்ந்து, தாயார் சந்நதியருகே சென்றார்.

'யாரு..? பாண்டுவா..' என்று சற்றே கூன் விழுந்துவிட்ட பண்டரிபாய் தலையை நிமிர்த்திக் கேட்டாள்.

'பாண்டுவேதான்.. நீங்க எப்படி இருக்கேள்?'

'இருக்கேன்..அதான் பார்க்கறியே?' என்று சற்றே நிறுத்தினாள். உரையாடல் இன்றிச் சில கனங்கள் நகர்ந்தன.

'ஏண்டா பாண்டு,சாட்டை வெங்கடாசலத்தை திருவல்லிக்கேணியில் பார்த்துப் பேசினதையெல்லாம் சொன்னான். நான் கேக்கறேன்னு தப்பா எண்ணாதே.நீ இப்படி பண்ணியிருக்கக் கூடாது' என்ற பீடிகை பலமாக இருந்தது.

'என்ன பாட்டி சொல்றேள்?'

'சொல்றேன் சொரக்காய்க்கு உப்பில்லேனு..' என்று ஒரு வெட்டு வெட்டியபடியே,

' உன்னையும் உன் அண்ணன் குழந்தைகளையும் ஆத்மார்த்தமா பாத்துண்டாளே, லட்சுமி.. அவளை அம்போனு விட்டுட்டு உன் காரியமாச்சுன்னு போயே போயிட்டயே ஞாயமா?'

அதிர்ந்தார் பாண்டு.

'லட்சுமி இப்போ எங்கே இருக்கா பாட்டி...'

'பாடசாலையையும் இழுத்து மூடினதுக்கப்பறம் நிற்கதியா நின்ன அவளை, என் வீட்டு அவுட் ஹவுஸ்ல வந்து இருடீன்னேன். காலத்தை ஓட்டிண்டு என்னோடத்தான் இருக்கா?'

இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தாயார் சந்நிதியில் இருந்து வெளியில் வந்தாள் லட்சுமி.

இடைபட்ட பத்து வருடங்களில் சற்றே தளர்ந்திருந்தாலும், முகத்தில் பழைய பளபளப்பு இருந்தது.

பாண்டுவைப் பார்த்ததும், 'செளக்யமா..? குழந்தைகள் எப்படி இருக்கா?' என்று பாண்டுவைக் கேட்டாள் லட்சுமி. நடந்த விவரங்களையும் பண்டரிபாயும், லட்சுமியும் கேட்டறிந்தனர்.

'வேரையே வெட்டி வீசற உலகத்துல, பட்டு போன வேருக்குப் பக்கமா கொழுகொம்பா நின்ன உங்களை தூக்கி எறிஞ்சது ஒண்ணும் அதிசயமில்லை. இப்பவாவது அதை புரிஞ்சிக்கிட்டு சூதானமா நடந்துக்கிட்டா சரி..' என்றவள், 'பத்து மாசம் சுமந்து பெத்து வளத்தவாளே, 'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' ன்னு புரிஞ்சப்பறம்.. கடைசி காலத்துல 'எனக்கு நீ, உனக்கு நான்'னு இருக்கறபோது, பெறாமலே ரெண்டு பிள்ளைகளை வளர்த்த நீங்க ஏன் அப்படி இருக்கப்படாதுங்கறேன்.!' என்றுசொல்லிவிட்டு அவர்களின் அந்நியோன்யத்துக்குத் தடையாக இல்லாமல், அப்பால் நகர்ந்தாள் பண்டரிபாய்.

லட்சுமியும், பாண்டுவும், 'எனக்கு நீ .. உனக்கு நான்..' என்று தங்கள் கண்களால் பேசி உறுதிப்படுத்திக் கொண்டிருந்ததை ஆமோதித்தாற்போல், தாயார் சந்நிதியிலிருந்து காண்டாமணி ஒலித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT