'தமிழ் இலக்கிய உலகில் மாற்றுத்திறன் என்பது ஒரு தடை அல்ல; ஆக்கபூர்வமான உந்துசக்தி' என்பதை நிரூபிக்கும் வகையில், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறன் கொண்ட தமிழ் ஆசிரியர் பா.வெற்றிக்குமரனின் இலக்கியச் சேவை நீடித்து வருகிறது.
'அன்பு நதி' எனும் யூடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வுப் பாடல்கள், பதிவுகளையும் வெளியிட்டு வரும் இவர், தேசத் தலைவர்கள், தமிழறிஞர்களின் வேடமிட்டு மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கும் புதுமையான அணுகுமுறையின் மூலமாகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'2004 -இல் 'அன்பு நதி', 2018 - இல் 'விடியல் வெளிச்சம்', 2019 -இல் 'குரங்கும் குருவியும்', 2022 -இல் 'வசந்தம் வரும் வாடாதே', 2023 -இல் 'பாடி விளையாடு பாப்பா', 2024 -இல் 'அதிசய மாமரம்', 2025 -இல் 'தீக்குச்சி' (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். பிரபல இதழ்களில் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. கவியரங்கம், பேச்சரங்கம், பட்டிமன்றம் போன்ற பல இலக்கிய மேடைகளில் எனது பங்களிப்பு தொடர்கிறது.
என்னுடைய இலக்கியப் பங்களிப்பு, கல்விப் பணிகளுக்காக, இதுவரை 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும், 25-க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளையும் பெற்றுள்ளேன். 2024- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளேன்.
பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, நான் எழுதிய 'தீக்குச்சி' கவிதைத் தொகுப்பு நூலை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டனர். 200 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ள இந்த நூலுக்கு எழுத்தாளர் அழகிய பெரியவன் வாழ்த்துரை எழுதியுள்ளார்.
பார்வையின்மை ஒரு பொருட்டல்ல. மாற்றுத்திறனாளிகள் அசாத்திய உழைப்பாலும், தங்களது பணிகளாலும் வாழ்க்கையில் சாதிக்கலாம்' என்கிறார் வெற்றிக்குமரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.