தினமணி கொண்டாட்டம்

டும்டும்டும்: 35 ஆண்டுகள் காத்திருப்பு!

சக்ரவர்த்தி


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், அப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை பலருக்கும் ஏற்படுகிறது. அப்படி 35 ஆண்டுகள் காத்திருந்தவரின் காதல் கதைதான் இது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் சிக்கண்ணா. சிக்கண்ணா இளம் வயதில், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜெயம்மா என்பவரை நேசித்தார். வழக்கம் போல் ஜெயம்மா வீட்டினர், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து வைத்துவிட்டனர். அதிர்ந்து போன சிக்கண்ணா மனதுக்குள் அழுது தீர்த்தார்.

திருமணமான சில ஆண்டுகளில் ஜெயம்மாவுக்கு குழந்தைப் பேறு ஏற்படவில்லை. "குழந்தை பெறும் பாக்கியம் ஜெயம்மாவிற்கு இல்லை என்று சொல்லி பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தது கணவரது குடும்பம்.

ஜெயம்மாவுக்கு நேர்ந்த துயரத்தை உணர்ந்த சிக்கண்ணா "திருமணம் செய்து கொள்ளலாம்' என்று நேசக்கரம் நீட்டினார். ஆனால் மறுமணம் செய்து கொள்வது தவறு என்று நினைத்து, ஜெயம்மா திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சிக்கண்ணா துவண்டு போனார். அவர் மனம் முழுவதும் ஜெயம்மா வியாபித்து இருந்தார். ஜெயம்மாவின் நினைவில் சிக்கண்ணா ஆண்டுகளை ஓட்டினார்.

ஜெயம்மாவின் நினைவில் சிக்கண்ணா திருமணம் செய்து கொள்ளாமல் ஜெயம்மாவிற்காகக் காத்திருப்பதை உணர்ந்த சொந்தங்கள் "சிக்கண்ணாவைத் திருமணம் செய்து கொள்' என்று ஜெயம்மாவை வற்புறுத்தத் தொடங்கினர். சிக்கண்ணாவின் உண்மையான காதலைப் புரிந்து கொண்ட ஜெயம்மா, சிக்கண்ணாவைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

சென்ற வாரம் சிக்கண்ணா - ஜெயம்மா திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. ஜெயம்மாவின் கரம் பிடிக்க சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்துள்ளார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT