மிதக்கும் சூரிய ஒளித்தகடு!
சூரிய ஒளியின் மூலம் மின்சக்தி தயாரிப்பதற்கான சூரிய ஒளித் தகடுகளை பொதுவெளிகளிலோ, கட்டடத்தின் மாடிகளிலோ பொருத்துவதைத்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சூரிய ஒளியின் மூலம் மின்சக்தி தயாரிப்பதற்கான சூரிய ஒளித் தகடுகளை பொதுவெளிகளிலோ, கட்டடத்தின் மாடிகளிலோ பொருத்துவதைத்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய ஒளித்தகடுகளின் மூலம் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில்தான் அந்தப் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. மிதக்கும் சூரிய ஒளித் தகட்டின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இந்த அமைப்பு, உலகிலேயே மிகப் பெரியதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
வழக்கமாக சூரிய ஒளித்தகடுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும்போது, ஒரு கண்ணாடி உள்ள போட்டோ வோல்டெக் மாடூல்ஸைத்தான் (பிவி மாடூல்ஸ்) பயன்படுத்துவார்கள். இந்த மிதக்கும் சூரிய ஒளித்தகடு மின்சக்தி தயாரிக்கும் அமைப்பில் இரண்டு கண்ணாடிகள் உள்ள பிவி மாடூல்ஸைப் பொருத்துகிறார்கள். இது சூரிய ஒளியின் தாக்கத்தினால் ஏற்படும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் திறனுடையதாக இருக்கும்.
இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 4 சதவீதத்தை நிறைவு செய்யுமாம்.
இதே அளவு மின்சாரத்தை அனல் மின்நிலையம் மூலம் உற்பத்தி செய்தால், 32 ஆயிரம் கிலோ கார்பன் காற்றில் கலக்கும். சுமார் 7,000 கார்களில் இருந்து வெளிப்படும் புகையில் உள்ள கார்பனின் அளவு இது.
இந்த மிதக்கும் சூரிய ஒளித்தகடு மின்சக்தி உற்பத்தி அமைப்பினால் சுற்றுச்சூழல் கேடு அடைவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் பொது பயனீட்டுக் கழகத்தின் முன் முயற்சியில் செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் இந்த மிதத்கும் சூரிய ஒளித்தகடு மின்னாற்றல் அமைப்பை உருவாக்கி வருகிறது.