முழுமையான முகக்கவசம்!
கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் இருக்க முகக்கவசம் அணிகிறோம்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் இருக்க முகக்கவசம் அணிகிறோம். நம்மில் பலர் முகக்கவசத்தைப் பேருக்கு முகத்தில் மாட்டிக் கொண்டு மூக்கை திறந்து வைத்துக் கொண்டு பிறருடன் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் முகக்கவசங்களை அடிக்கடி கழற்றி மாட்டி முகத்தில் கைகள் படும்படி செய்கிறார்கள்.
முகக்கவசத்தை அடிக்கடி தொடுவதால், கழற்றி மாட்டுவதால், கரோனா வைரஸ் அதில் தொற்றியிருந்தால், நமது முகத்தில் கைகள் படும்போது வைரஸ் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். எதற்காக முகக்கவசம் அணிந்திருக்கிறோமோ, அந்த நோக்கம் இப்படிப்பட்ட செயல்களால் அடிபட்டுப் போகிறது.
பெரும்பாலான முகக்கவசங்கள் கண்களை மறைப்பதில்லை. கண்களின் மூலமாகவும் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கும்போது, கண்களை அவற்றால் பாதுகாக்க முடியாமல் போகிறது.
இப்படிப்பட்ட குறைகள் எதுவும் இல்லாத முகக்கவசத்தை உருவாக்கியிருக்கிறார்கள், ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் மானேசரில் உள்ள "டெஸ்மேனியா டிசைன்' என்ற நிறுவனத்தினர்.
கரோனா தொற்று ஏற்பட்டவுடன், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், கரோனா தொற்று காலத்தில் மக்களுக்குப் பயன்படக் கூடியவிதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முகக்கவசத்தை வடிவமைக்கத் தொடங்கினார்கள்.
இப்படி உருவாகியதுதான் அஅதஙத என்ற இந்த முகக்கவசம்.
""நாங்கள் எப்போதுமே எங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அதற்கேற்பவே செயல்படுவோம். சில சீக்கிய நண்பர்கள் அவர்கள் டர்பன் அணிந்திருப்பதால் அவர்களுக்கு ஏற்ற முகக்கவசங்கள் கிடைக்கவில்லை என்றார்கள். அங்கிருந்து தொடங்கியதுதான் எங்கள் பணி.
கரோனா பொது முடக்கத்தின் காரணமாக எங்களுடைய தொழிலகத்தைத் திறக்க முடியவில்லை. எனவே நாங்கள் ஐஐடி - தில்லியில் உள்ள சில பேராசிரியர்களைச் சந்தித்து எங்களுடைய முகக்கவசத்தைப் பற்றிச் சொன்னோம். அவர்களுடைய தொழில் பட்டறைகளில் முகக்கவசங்களைத் தயாரிக்க அனுமதி கேட்டோம். அவர்களுக்கு எங்களுடைய முகக்கவசம் பிடித்துப் போகவே, அவர்களும் அதை மேம்படுத்த பல ஐடியாக்களை சொன்னார்கள். அனுமதியும் அளித்தார்கள்'' என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அனுஜ் பிரசாத்.
""பிற முகக்கவசங்கள் முகத்தின் முழுப்பகுதியையும் மறைப்பதில்லை. இதனால் கண்களில் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எங்களுடைய முகக் கவசம் முழு முகத்தையும் மறைக்கிறது. இதனால் முகக்கவசம் அணிந்த ஒருவர் கண்களையோ, மூக்கையோ, வாயையோ தொட முடியாது.
இரண்டாவதாக இந்த முகக் கவசத்தை திரும்பத் திரும்ப தூய்மைப்படுத்தி அணிய முடியும்.
கண்களையும் இந்த முகக்கவசம் மறைப்பதால் இதை அணிந்திருப்பவர்கள் எதையும் சரியாகப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று அச்சப்படத் தேவையில்லை. இதை அணியும்போது சாதாரணமாக நாம் பார்க்க முடிவதைப் போல பார்க்க முடியும்'' என்கிறார் அனுஜ்.
முகக் கவசம் அணிந்திருப்பவர்கள் அதை அடிக்கடி கழற்றி மாட்டுவதற்கு முக்கிய காரணம், முகத்தில் காற்றோட்டம் இல்லாமல் வேர்த்து வழிவதுதான். முகத்தில் எரிச்சல் ஏற்படுவதுதான். இந்த முகக்கவசத்தில் முகத்துக்கும் முகக்கவசத்துக்கும் இடையே சிறிது இடைவெளியும் காற்றோட்டமும் இருக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். கண்ணாடி அணிந்திருப்பவர்களும் இதை அணிய முடியும்.
""வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இந்த முகக்கவசங்களை நாங்கள் செய்து தருகிறோம். மருத்துவருக்கு அதிகப்படியான ஃபில்ட்டர்களை வைத்தும், பொருள்களை டெலிவரி செய்யும் ஒருவருக்கு குறைவான ஃபில்ட்டர்களை வைத்தும் முகக்கவசத்தைத் தயாரித்துத் தருகிறோம். ஃபில்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும். எனினும் இந்த முகக்கவசத்தில் உள்ள ஃபில்ட்டர்கள் ச95 முகக்கவசத்தில் உள்ளதைப் போன்ற தரத்துடன் இருக்கும். தற்போது ஆன்லைன் மூலமாக நிறையப் பேர் எங்களுடைய முகக்கவசத்தை ஆர்டர் செய்திருக்கிறார்கள். வரும் சில வாரங்களுக்குள் அவர்கள் எல்லாருக்கும் முகக்கவசங்கள் கிடைக்கும் வகையில் உற்பத்தியை முடுக்கி இருக்கிறோம்'' என்கிறார் அனுஜ் பிரசாத்.