இணைய வெளியினிலே...
மழை எப்போதும் நிற்பதில்லை. இடம்தான் மாறுகிறது...இப்போது நமக்கிடையில்.
முக நூலிலிருந்து....
மழை எப்போதும் நிற்பதில்லை.
இடம்தான் மாறுகிறது...
இப்போது நமக்கிடையில்.
பழநிபாரதி
அன்பையும் பொருட்களையும் பயன்படுத்தாமல் வைத்திருக்காதீர்கள்...
துருப்பிடித்து விடும்.
நேசமிகு ராஜகுமாரன்
அசடுகள் புத்திசாலித்தனமாகவும், புத்திசாலிகள் அசட்டுத்தனமாகவும்...
வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்.
உமா மகி
வாழ்வைத் தொலைத்த பின் தான் கிடைக்கின்றன...
வாழ்வதற்கான அத்தனை பாடங்களும்.
வழிப்போக்கன்
சுட்டுரையிலிருந்து...
மனிதனுக்கு படபடப்பை ஏற்படுத்தும் மூன்று பிரச்னைகள்...
லோ சுகர்
லோ பிரஷர்
லோ பேட்டரி
பகீர் கந்தசாமி
கேள்விகள் கேட்காம, அறிவுரைகள் சொல்லாம, குறைகள் கண்டுபிடிக்காம, கழிவிரக்கம் கொள்ளாம இருக்கப் பழகறதுதான்... அழகாக வயதாகுதல்.
கடவுள்
அனுபவம் அதிகரிக்க... அதிகரிக்க...
உதடுகள் தன் பேச்சை நிறுத்திக் கொள்கின்றன.
பனித்துளி
நீ என்னதான் ஆணழகனா இருந்தாலும், குழந்தைக்குச் சோறு ஊட்டும் போது அந்த வழியாகப் போனா...
நீ பூச்சாண்டிதான்.
எனக்கொரு டவுட்டு
வலைதளத்திலிருந்து...
அகம்பாவத்தைக் கைவிடுதல் யாருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. அந்தஸ்து, பணம், திறமை, புகழ், வலிமை, வல்லமை முதலானவற்றின் மீது நாம் கட்டமைக்கிற அகம்பாவ உணர்வைக் கைவிட முயல்கிறவர்கள் முதலில் எதிர்கொள்ள நேர்வது அளவில்லா அவமானங்களையே. அந்த அவமானங்கள் மீண்டும் அகம்பாவத்தின் சட்டகங்களுக்கு பின்னால் நம்மை நெட்டித் தள்ளுவதாகவே அமையும்.
அவமானங்களின் நஞ்சு சக மனிதர்கள் மீதான நம்பிக்கை இழப்பெனவும் வெறுப்பாயும் ரத்த நாளங்களில் படியும். ஆனால் இந்த நெருக்கடிகளை ரசித்து அவற்றோடு விளையாடத் தொடங்குகிற ஒருவன் வாழ்வின் வேறொரு பரிமாணத்தைக் காணத் தொடங்குவான்.
புத்தர் அத்தகையவர். அவர் ஆசைகளில் இருந்து மட்டுமல்ல, அகம்பாவத்திலிருந்தும் விடுபடுதலை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். அறிவு உருவாக்கும் அகம்பாவம் பெரிதினும் பெரிது. அது தன்னையும் அழித்து மனிதகுலத்தையும் அழிக்க
வல்லது. தொழில்நுட்பப் புரட்சியின் காலத்தில் ஒவ்வொரு லைக்கிலும் கூட நம் அகம்பாவம் வளர்கிறது. வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி வெல்தலில் இல்லை; விளையாடுதலில் இருக்கிறது என்பதை மறந்து போகிறோம். நாம் போலிப் புகழின்
அகம்பாவத்தில் மூழ்கித் திளைக்கிறோம். சில புத்தகங்களின் - சில திரைப்படங்களின்- சில வாழ்வனுபவங்களின் மூலம் கிடைக்கிற சிறிய அளவிலான ஞானமும் நம்மை பீடங்களில் ஏற்றிப் பார்க்கிறது. புத்தரோ தன்னுடைய அளவில்லா ஞானத்தோடுதான் ஒவ்வொரு நொடியும் போரிட்டார். அதனாலேயே வாழ்நாளெல்லாம் அவமானங்களை எதிர்கொண்டார். ஆனால் சோர்ந்துவிடாமல் அதை விளையாட்டுப் போல மாற்றிக் கொண்டார்.