முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

நெடிய உரையாடல் என்பது...மெளனத்தையும் சேர்த்துதான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

முக நூலிலிருந்து....


இலையசைத்து மரங்களும்
தலையசைத்து நானும்
ஆதிமனிதனின் மொழியைப்
பேசிக் கொண்டிருக்கிறோம்.

-இளமதி

நெடிய உரையாடல் என்பது...
மெளனத்தையும் சேர்த்துதான்.

-நேசமிகு ராஜகுமாரன்

கூடுதலாகக் கொஞ்சம் சாப்பிடும்போது...
யாருடைய பசியையோஉண்பது போலிருக்கிறது.

- ராஜா சந்திரசேகர்


கிணற்று நீரில் தெரிகிறது...
இரவெல்லாம் ஊறிய
நிலவின் ருசி.

-ஆரூர் தமிழ்நாடன்

சுட்டுரையிலிருந்து...


சரியோ, தப்போ...
தைரியமா பேசக் கத்துக்கணும்.
இங்க பதில் சொல்றதுக்கு பயந்தாலே பாதி தப்பை...
நம்ம தலையில கட்டிருவாங்க!

-நட்டு

யாரோ ஒருவரால் நிராகரிக்கப்படும் அன்பு...
யாரோ ஒருவரால் விரும்பப்படலாம்.
அன்பு என்றும் அனாதையல்ல!

-பொன்னை நாதன்

இலக்கை நோக்கிச் செல்லும் உங்கள் வாழ்வின் பயணம்...
முடியாததையும் முடித்துக் காட்டும்.

- வாழ்வின் விடியல்

செய்யும் செயல்கள் எல்லாவற்றுக்கும் பலன்களை எதிர்பார்க்காதவர்களே...
பின்னாளில் "நல்ல மனிதர்' என்று போற்றப்படுவார்கள்.
வியாபாரம் என்பது வேறு.

சிதறல்கள்

வலைதளத்திலிருந்து...

இன்று ஊரெங்கும் பேரங்காடிகள் வெவ்வேறு பெயர்களில் (ஹைபர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட்), வடிவங்களில் பெருகி வருகிறது. எங்கு திரும்பினாலும் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம், 25-75% தள்ளுபடி, இலவச பார்க்கிங் வசதி, கணினி பில்லிங் கவுன்டர்கள் என்று நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பெரிய அறைகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நுழைவுப்பகுதி, பெட்டகங்களில் அடைக்கப்பட்ட ஜெல்லி, மிட்டாய், ரசாயனப் பொருட்கள் கலந்த கலர் குளிர்பானங்கள் என்று உடல்நலத்தைப் பேணும் பொருட்கள், கவர்ச்சிகரமான ஷாம்பு, முகப்பசைகள், உதட்டுச் சாயம், அழகுசாதனப் பொருட்கள், எண்ணெய் (ஆயில்) நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் (பாட்டில்), மாவுப் பொருட்கள், பலசரக்கு மற்றும் மளிகைப் பொருட்கள் ஒருபுறமும், புத்தகங்களுக்கென தனிப் பிரிவு, குழந்தைகளுக்கான பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள், காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று எளிதில் கண்டுகொள்ளக்கூடிய வகையில் பெயர்ப் பலகைகள் கடை முழுவதும் தொங்க விடப்பட்டிருக்கும்.

இப்படி நகர்புறங்களில் மெல்ல மெல்ல ஹைடெக் கடைகளின் ஆக்கிரமிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இதையே குடும்பத் தொழிலாகக் கொண்ட நமது தெருவோர அண்ணாச்சி கடைகள் வேகமாக மறைந்து வருகின்றன.

அன்றைய நாட்களில் இதுபோன்று தள்ளுபடி என்ற வார்த்தையை நாம் மறந்தும் கேட்டதில்லை. ஒவ்வொரு பொருளும் அதற்குரிய சரியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. விலைகளை மறைமுகமாகக் கூட்டியும் இறக்கியும், கலர்கலராக தள்ளுபடி விளம்பரம் செய்யும் இன்றையப் போக்கு அன்று கையாளப்படவில்லை. கவர்ச்சியான தள்ளுபடி அறிவித்து அதிக லாபம்/ஆதாயம் பெற அவர்கள் எண்ணியதில்லை.

இன்று அலங்கார விளக்குகளிலும் கவர்ச்சி தள்ளுபடியிலும் மின்னும் இந்த சூப்பர் மார்க்கெட்களின் அசுர வளர்ச்சி, இதுபோன்ற எண்ணற்ற அண்ணாச்சி கடைகளைத் தேய்பிறையாக்கி உள்ளது.

http://entamilpayanam.blogspot.com/

முழு கட்டுரையைப் படிக்க →