வாட்ஸ்ஆப்: விடியோ அழைப்பு சேவையில் புதிய வசதி!
கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து விடியோ அழைப்பு சேவை, உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது.
கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து விடியோ அழைப்பு சேவை, உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது.
பொது முடக்க காலத்தில் பட்டித்தொட்டிகளையும் நகரங்களையும் இணைத்து, வீடுகளில் இருந்து கொண்டே உறவுகள் மேம்பட உதவியது இந்த விடியோ அழைப்பு வசதி. ஆகையால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது விடியோ அழைப்பு சேவையில் புதிய வசதிகளை வழங்கி பயன்பாட்டாளர்களை ஈர்த்து வருகின்றன.
அதன்படி வாட்ஸ்ஆப்பும் நான்கு பேர் பங்கேற்கக் கூடிய விடியோ அழைப்பு சேவையை எட்டுப் பேர் பங்கேற்கக் கூடியதாக உயர்த்தியது.
தற்போது இந்த விடியோ அழைப்புக் குழு சேவையில் இருந்து துண்டிக்கப்பட்டவர்கள், அனுமதி இல்லாமல் இணையும் புதிய சேவையை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
முன்பு குழு அழைப்பில் இருந்து விலகிவிட்டால், மீண்டும் அந்தக் குழுவில் இருப்பவர்கள் அழைப்பு விடுத்தால் மட்டுமே இணைய முடியும்.
ஆனால் தற்போது குழுவில் இருந்து விலகி விட்டாலும் அந்தக் குழுவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற விவரத்தை வெளியே சென்றவர் காண முடியும்.
குழுவில் இருப்பவர்கள் தேவைப்படும்போது மட்டும் வேறு நபர்களை உள்ளே இணைக்கும் அல்லது ரத்து செய்யும் வசதிகளும், குழுவில் உள்ளவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய திரையையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை அனைத்து வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கும் அறிமுகமாகிவிட்டது.
வாட்ஸ்ஆப் குழு விடியோ அல்லது ஆடியோ சேவையை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பதையும், வெளியேற்று வதையும் ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதேநேரத்தில் இந்த சேவையில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானவை என்று வாட்ஸ்ஆப் உறுதி அளித்துள்ளது.
நேரக்கட்டுபாடு இல்லாமல் விடியோ குழு சேவையில் பேச உதவும் வாட்ஸ்ஆப் குழு விடியோ அழைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சேவை அனைவரையும் நிச்சயம் கவரும்.