வாய்ப்புகளைத் தேடித் தரும் நம்பிக்கை!
அண்மையில் மகாராஷ்டிரா மாநில நடுநிலை மற்றும் நடுநிலை உயர் கல்வித்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகுந்தலா காலே, நான்காம் வகுப்பு படிக்கும்போதே தந்தையை இழந்துவிட்டார்.
அண்மையில் மகாராஷ்டிரா மாநில நடுநிலை மற்றும் நடுநிலை உயர் கல்வித்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகுந்தலா காலே, நான்காம் வகுப்பு படிக்கும்போதே தந்தையை இழந்துவிட்டார். அவர் வசித்துவந்த அம்பேகான் தாலுக்காவில் மேற்கொண்டு படிக்க ஜூனியர் கல்லூரி ஏதும் இல்லாததால், சகுந்தலா பத்தாம் வகுப்பில் தேறியுவுடன் வயலில் கூலி வேலை செய்துவந்த அவரது தாய் மேலும் படிக்க வைக்கவோ, குடும்பத்தை நடத்தவோ வழி இல்லாததால் 14-ஆவது வயதிலேயே சகுந்தலாவுக்கு திருமணம் செய்து கணவன் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
கணவரின் கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட சகுந்தலா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில், மேற்கொண்டு படிக்க ஆசைபட்டார். அவரது மாமனாரும், கணவரும் கொடுத்த ஒத்துழைப்பால் டி.இடி முடித்த சகுந்தலா, முதல்பட்டதாரி பட்டம் பெற்றார். பின்னர் புணே பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வி வழி மூலம் மராத்தி மொழியில் மாஸ்டர் பட்டம் பெற்றார். தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியை பணியில் சேர்ந்தார். இது மட்டும் போதாது. நாம் மேலும் முன்னேற வேண்டுமானால் நம்முடைய சக்தியை வலுபடுத்த வேண்டும் என்று கருதிய சகுந்தலா, மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத வேண்டுமென்ற தன் கனவை நனவாக்க விரும்பினார்.
இதன்பின்னர் தான் எப்படி தேர்வு எழுதி வெற்றிப்பெற்று, இன்று மாநிலத்தில் உயர் பதவியை அடைந்தேன் என்பது பற்றி சகுந்தலா சொல்லத் தொடங்கினார்:
""மேற்கொண்டு படிக்க வேண்டுமென்று முடிவெடுத்தேனே தவிர அதற்கு தேவையான வசதிகளோ, புத்தகங்களோ இல்லை. எங்கள் கிராமத்தில் இருந்ததோ ஒரே ஒரு டிவிதான். பள்ளியிலிருந்து வந்தவுடன் வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும். கூடவே படிக்க வேண்டும் என்ற நிலைமையில் நான் தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவேன்.
விடியற்காலையில் எழுந்து தண்ணீர் பிடித்துவர செல்ல வேண்டும். வீட்டு வேலைகள் செய்யும்போதே வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு என் பொது அறிவை வளர்த்துக் கொண்டேன். வானொலியில் செய்திகள் வாசிக்கும் போதெல்லாம் என் பிள்ளைகள் ஓடிவந்து தகவல் கொடுப்பார்கள். 1993-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கிளாஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றவுடன் சோலாப்பூர் கல்வித்துறையில் வேலை கிடைத்தது.
1995- ஆம் ஆண்டு கிளாஸ் -1 ஆபிசர் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றவுடன் மகளிர் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை தலைவராக நியமிக்கப்பட்டேன்.
இதுவரை என் வாழ்க்கையில் நடந்தவைகளை நினைத்து பார்க்கும் போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு நான் கூறுவது இதுதான். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எப்போதும் புறக்கணிக்காதீர்கள், மனோதைரியமும், தன்னம்பிக்கையும், கடினமான உழைப்பும் இருந்தால் வாய்ப்புகள் நிச்சயம் உங்களைத் தேடி வரும்'' என்கிறார் சகுந்தலா காலே.